இலங்கை இராணுவ வீரர்களுக்கு எதிராக நீலகிரியில் ஆர்ப்பாட்டம்: 150 பேர் கைது..

sl

இலங்கையைச் சேர்ந்த இரண்டு உயர்நிலை படை அதிகாரிகள் நீலகிரி மாவட்டம் வெலிங்கடனிலுள்ள பாதுகாப்படைகள் பயிற்சி கல்லூரிக்கு வந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம் உட்பட்ட பல கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்ளூரிலுள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

இவர்களின் போராட்டத்தின் போது நீலகிரி மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு போகும் பாதைகள் பலமணி நேரம் தடைபட்டிருந்ததாகவும் அவர் கூறுகிறார். மேலும் குன்னூர் மற்று வெலிங்கடன் பகுதிகளில் கூடுதலாக இராணுவம் மற்றும் காவல்துறையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை இராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதமொன்றில் அவர் விங் கமாண்டர் எம்,.எஸ்.பண்டார தசநாயக் மற்றும் மேஜர் ஹரிஷ்சந்திர ஹெட்டியாராச்சிகே ஆகிய இரு உயர் இலங்கை இராணுவ அதிகாரிகள் உதகை வெலிங்டன் பயிற்சிக் கல்லூரிக்கு வந்திருப்பதாகத் தனக்குத் தகவல் வந்திருப்பதாகவும் ஏற்கெனவே பலமுறை தான் தனது எதிர்ப்பைத் தெரிவித்தும், தமிழக சட்டமன்றத்திலேயே இதுகுறித்த கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், இத்தகைய பயிற்சி தொடர்வது தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்துவதையே எடுத்துக்காட்டுகிறது என்றும் குறைகூறுகிறார்.

மேலும் கடந்த மே 27 அன்று தஞ்சையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே அண்டனி இலங்கை வீரர்களுக்குத் தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படக்கூடாது என மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக அறிவித்த அதே நாளில்தான் தசநாயகவும், ஹெட்டியாராச்சிகேயும் வெலிங்டனில் பயிற்சிக்கான ஆயத்தங்களைத் துவங்கினார் என்கிறார் முதல்வர். பயிற்சி கொடுப்பதில்லை என்பது அரசின் கொள்கை முடிவென்றால் எப்படி பாதுகாப்பு அமைச்சருக்குத் தெரியாமல் இப்படி இருவர் அழைக்கப்படலாம் என அவர் வினவுகிறார் .

இந்நிலையில் அவ்விருவரும் தங்கள் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படவேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நிகழும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாததுவரை, தமிழக மீனவர்கள் மீதான் தாக்குதல்கள் நிறுத்தப்படும்வரை  இந்தியா மற்றும் இலங்கைக்கிடையே எவ்வித இராணுவ ரீதியான உறவுகள் இருக்கக்கூடாது என தமிழக முதல்வர் தனது கடிதத்தில் மேலும் கோரியிருக்கிறார்.

 

 

சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்கு செயற்கைக்கோளை அனுப்ப தயாராகும் நாசா..

sun1
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சூரியனின் அடிப்பகுதி குறித்து விரிவான தகவல்களை பெற்றுக்கொள்ள நவீன அறிவியல் செயற்கைக்கோள் ஒன்றை இந்த மாதம் 26-ம் திகதி அனுப்ப முடிவு செய்துள்ளது.

இதில் இயங்கும் ஐரிஸ் டெலஸ்கோப், சூரியனின் அடிப்பகுதியில் இருந்து வெளியேறும் புற ஊதாக்கதிர்கள் (அல்ட்ராவயலெட்) குறித்து ஆராய்ந்து மிக துல்லியமான புகைப்படங்களை அனுப்பி வைக்கும்.

இது குறித்த கண்காணிப்பில் ஈடுபடும் ஐரிஸ் குழுவானது சூரியனில் உள்ள பொருட்கள் எவ்வாறு இயங்குகின்றன, அது எவ்வாறு சக்தியை பெறுகின்றது, மேலும் சூரியனின் சுற்றுப்புறத்தில் எவ்வாறு வெப்பம் வெளியேறி பரவி செல்கின்றது என்பது குறித்தும் கண்காணிக்கும்.

சூரியனின் மேற்பரப்பு மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றின் இடைப்பட்ட பகுதி இவற்றில் எங்கிருந்து புற ஊதாக்கதிர்கள் உருவாகின்றன என்றும் ஆராயும். இந்த புற ஊதாக்கதிர்கள் தான் பூமியின் காலநிலை மற்றும் பூமியின் காற்றுமண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த கண்டுபிடிப்புகள் சூரியனை பற்றி மேலும் பல தகவல்களை அறிந்துகொள்ள உதவும் என்று கூறப்படுகிறது.


வெள்ளவத்தையில் ஹெரோயின் வைத்திருந்த இளம் பெண் கைது

கொழும்பு, வெள்ளவத்தையில் ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 4 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் பொலிஸாரினால் கைப்பற்றபப்ட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 23 வயதான யுவதி ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் இன்று கொழும்பு புதியகடை மூன்றாம் இலக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இக் கைது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

 

இறுதிவரை போராடி தோற்ற இலங்கை அணி..

168646515MS00015_Sri_Lanka_

இலங்கை அணிக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ண லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தலைவர் மத்யூஸ் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர் குஷால் பெரேரா முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். டில்ஷான் 20 ஓட்டங்களை பெற்று வெளியேறினார். தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற குமார் சங்ககார மட்டும் தனி ஆளாக இலங்கை அணியை மீட்க போராடினார். இறுதியில் அவரால் 68 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. மூன்று வீரர்களை தவிர அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்ககொள்ள இறுதியில் இலங்கை அணி 37.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. நியூசிலாந்து அணி சார்பில் மெக்லிநகன் 4 விக்கெட்களையும்  மில்ஸ், நதன் மெக்கலம் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மிகவும் இலகுவான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு எரங்க ஆரம்பத்தில் அதிர்ச்சியளித்தார். இவர் வீசிய 4வது ஓவரில் ரோஞ்சி  7  ஓட்டங்களுடனும் கப்டில் 25 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.அடுத்து வந்த மலிங்க தனது வேகத்தால் நியூசிலாந்து வீரர்களை கதிகலங்க வைத்தார். ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 80 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நதன் மெக்கலம் 32 ஓட்டங்களை பெற்று நியூசிலாந்து அணியை வெற்றி பாதைக்கு இட்டுச்சென்றார்.

இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் இறுதிவரை மிகச் சிறப்பாக பந்துவீசி நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். நடுவர்களின் சில தவறான தீர்ப்புக்கள் இன்றைய போட்டியை மாற்றியது என கூறலாம். இறுதியில் நியூசிலாந்து அணி 1 விக்கெட்டினால் வெற்றிபெற்றது இலங்கை சார்பில் சிறப்பாக பந்து வீசிய மலிங்க 4 விக்கெட்டுகளையும்  எரங்க 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இன்றைய தோல்வியின் மூலம் இலங்கை அணியின் அரை இறுதிக்கான வாய்ப்புகள் கேள்விகுறியாகியுள்ள நிலையில் அடுத்துவரும் இரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

~கேசா~

 

வவுனியாவில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளுக்கும் தூரமணி

வவுனியாவில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளுக்கும் தூரமணி (மீற்றர்) பொருத்தப்படும் என வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சி.ரவீந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள முச்சக்கரவண்டிகளுக்கு தூரமானி பொருத்தும் நடவடிக்கை யாழ். வீதி மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், இந்த வருடஇறுதிக்குள் வவுனியா மாவட்டத்தில் உள்ள முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு நல்ல முறையிலான சீருடை வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதன்போது முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு தூரமானிகளை கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன் வழங்கி வைத்தார்.

இதற்கான நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

vna

விஸ்வரூபம்- 2 ஒளிப்பதிவாளரை மாற்றிய கமல்

கமல்ஹாசன் இயக்கத்தில் வளர்ந்து வரும் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தினை திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
விஸ்வரூபம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் 50 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் தாய்லாந்தில் படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது, விஸ்வரூபம் 2 படத்தின் ஒளிப்பதிவாளர் மாற்றப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கிறது.

விஸ்வரூபம்’ படத்தில் சானு ஜான் வர்கீஸ் என்பவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

இவரது ஒளிப்பதிவுக்கு பாராட்டுகள் கிடைத்திருந்தும், இரண்டாம் பாகத்தில் ஷாம்தத் என்பவரை ஒளிப்பதிவாளராக தெரிவு செய்திருக்கிறார் கமல்.

இவர் பணியாற்றிய ‘சாக்சம்’ என்ற படத்தின் ஃபுட்டேஜ் பார்த்த பின்பே கமல் இவரை தெரிவு செய்ததாகக் கூறுகின்றனர்.

‘விஸ்வரூபம் 2’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டதால், இறுதி கட்டப் படப்பிடிப்பை டெல்லியில் நடத்தவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல்நிலை பாதிப்பு – மண்டேலா மீண்டும் மருத்துவமனையில்…

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மீண்டும் நுரையீரலில் கிருமித் தொற்று ஏற்பட அவர் மறுபடியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

94 வயதாகும் மண்டேலாவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றாலும், அவரது உடல்நிலை மருத்துவ சிகிச்சைக்கு கட்டுப்படக்கூடிய அளவில்தான் இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் பிரெடோரியாவிலுள்ள பெயர் அறிவிக்கப்படாத மருத்துவமனை ஒன்றில் மண்டேலா சேர்க்கப்பட்டுள்ளார்.

மண்டேலாவை குணப்படுத்தவும், அவருக்கு கஷ்டத்தைக் குறைக்கவும் மருத்துவர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்துவருவதாக அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

இனவெறி ஆட்சியை எதிர்த்து போராடிய மண்டேலா சிறையில் இருந்த இருபத்து ஏழு ஆண்டு காலத்தில் அவருக்கு காசநோய் ஏற்பட்டிருந்தது.

வெள்ளையின சிறுபான்மையினரின் இனவெறி ஆட்சியிலிருந்து தென்னாப்பிரிக்கா ஜனநாயகப் பாதைக்கு திரும்பியபோது அதன் தலைவராக இருந்த மண்டேலா தென்னாப்பிரிக்காவின் தேசத் தந்தையாக மதிக்கப்படுகிறார்.

பிரஞ்சு ஓபன் டென்னிஸ்: மீண்டும் செரீனா சாம்பியன்

serena

பிரஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் வென்றுள்ளார்.

பாரிஸின் ரோலண்ட் கேரோஸ் டென்னிஸ் அரங்கத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் மரியா ஷாரபோவாவை 6-4 6-4 என்ற நேர் செட் கணக்கில் செரீனா வீழ்த்தினார்.

அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் வெல்லும் 16ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது.

கடந்த பதிமூன்று முறையாக தவிர தம்மிடையே நடந்த ஆட்டங்களில் தொடர்ந்தும் செரீனாவே ஷாரபோவை வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் பாடசாலை மாணவியைக் கடத்தித் தாக்குதல்! வல்லை வெளியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு..

kidnap

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியொருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

வல்லை வெளியொன்றிலுள்ள கோயில் ஒன்றிலிருந்தே தனிமையில் அழுது கொண்டிருந்த நிலையில் இம்மாணவி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.யாழ். நல்லூர் பகுதியில் வைத்து இவர் கடத்தப்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மீட்கப்பட்ட மாணவி தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கியுள்ளனர்.இச்சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை குறித்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது தொடர்பில் எதனையும் உறுதிப்படுத்த முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

இலங்கையில் சீரற்ற காலநிலை..பலியானோர் தொகை 24 ஆக உயர்வு.. 22 மீனவரை காணவில்லை.. 30 படகுகள் கரை திரும்பவில்லை..

m2

சீரற்ற காலநிலையில் சிக்கி பலியாகியுள்ள மீனவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 8 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 4 பேரும் காலி மாவட்டத்தில் 12 பேரும் மரணமடைந்துள்ளதாக அந்த நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் 22 மீனவர்கள் காணமல் போயுள்ளதாகவும் 30 படகுகள் கரைக்கு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.அதேவேளை சேதமடைந்த 14 படகுகளின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் நிலையம் அறிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான மீனவப்படகுகளில் இருந்து காணாமல் போன மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த சில மணித்தியாலங்களில் காலநிலை சீரடைந்தமை காரணமாக நீர்மட்டம் உயர்ந்திருந்த நீர்த்தேக்கங்களின் மட்டங்கள் குறைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்போது இடம்பெயர்ந்தவர்களுக்கான நலன்புரி வசதிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவருவதாக மத்திய நிலையத்தின் பிரதி ஊடக பணிப்பாளர் சரத்லால் குமார தெரிவித்தார். எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டில் நிலவும் கடும் காற்றுடனான மழை காலநிலை படிப்படியாக குறையக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தென்மேற்கு கடற்பிராந்தியம் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலையிலேயே இருக்கும் என்று திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

 

 

யானைக்கு மதம் பிடித்தால் என்ன நடக்கும் என்று பாருங்கள்..

இன்றும் கடும் காற்று மழை: கடலிற்குச் செல்வது பாதுகாப்பில்லை!

நாட்டில் மீன்பிடித் தொழிலை இன்றும் (09) மேற்கொள்ள முடியாது என இலங்கை காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மன்னார், கொழும்பு, காலி மற்றும் பொத்துவில் ஊடே யாழ்ப்பாணம், திருகோணமலை வரையான கடற் பிரதேசங்களின் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும்.

புத்தளத்திலிருந்து காலி, ஹம்பாந்தோட்டை வரையான கடற் பிரதேசங்களில் இடையிடையே மழை பெய்யக் கூடும் எனவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் 31 பேர் காணாமற் போயுள்ளனர்.

காயமடைந்த 22 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (08) இரவு 7.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 318 குடும்பங்களைச் சேர்ந்த 1180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெய்வேந்திரமுனை, பலப்பிட்டி, காலி, பேருவளை, தெஹிவளை உள்ளிட்ட கரையோர பிரதேசங்களில் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற பல மீனவப் படகுகள் காணாமல் போயுள்ளன.

நாட்டில் நிலவும் மோசமான கால நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் பொது மக்களுக்கு உதவும் பொருட்டு இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடலில் மீன்பிடிக்கச் சென்று கடும் காற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்பதற்காக கடற்படையினரின் மூன்று கப்பல்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பலப்பிட்டிய பிரதேசத்தில் 5 மீனவர்களும், கொழும்பில் 2 மீனவர்களும் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் காணப்படும் கொந்தளிப்புநிலை சற்றுக் குறைவடைந்ததும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக கடற்படையினருக்குச் சொந்தமான பல சிறிய படகுகள் கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடல்கொத்தளிப்பு தொடர்ந்தும் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் கடற்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பலப்பிட்டி பிரதேசத்தில் 5 படகுகள் முற்றாக நீரில் மூழ்கியதுடன், 15 முதல் 20 வரையான படகுகள் காணாமல் போயுள்ளன. நீரில் மூழ்கிய மூன்று மீனவர்களின் சடலங்கள் பேருவளைப் பகுதியில் கரையொதுங்கியதுடன், 5 மீனவர்கள் பலப்பிட்டியவில் கடற்படை யினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பிரதேசத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவப் படகுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடலுக்குள் தத்தளித்துக்கொண்டிருக்கும் மீனவர்களை மீட்டுத்தருமாறு கோரி தெஹிவளைப் பிரதேச மீனவர்கள் நேற்றுக் காலை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தின் குறுக்கே மீன்பிடிப் படகை நிறுத்தி ரயிலை மறித்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தெய்வேந்திரமுனை பிரதேசத்தில் மீன்பிடிக்கச் சென்ற 8 படகுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

காலநிலை சீரடையும்வரை தெற்கு மற்றும் மேல் மாகாணத்திலுள்ள மீனவர்களை கடலுக்குச் செல்லவேண்டாமென எச்சரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பூனைகளின் சேட்டைகள்..


வவுனியாவில் சிற்றூழியர் போராட்டம் : நியமனத்துக்கு அமைச்சர் உத்தரவாதம்

சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் சிற்றூழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதையடுத்து, நியமனம் பெறுவதற்குரிய நடைமுறைகளில் பங்குபற்றியவர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை நியமனம் வழங்கப்படும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் உறுதியளித்திருக்கிறார்.

கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய திணைக்களங்களில் சிற்றூழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலவுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்காக அவர்கள் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வைபவம் நடைபெறவிருந்த வேளையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியா வைத்தியசாலையில் இருந்து வவுனியா நகரசபை மண்டபம் வரையில் பேரணியாகச் சென்றனர்.

அங்கு நுழைவாயிலில் வைத்து அவர்களை வழி மறித்த பொலிசார் அவர்களது பிரச்சினை தொடர்பாக அமைச்சர் நேரடியாகப் பேச்சுக்கள் நடத்த விரும்புவதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் ஐந்து பிரதிநிதிகளை அமைச்சரிடம் அழைத்துச் சென்றனர்.

அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின்போது, தகுதியுள்ளவர்கள் என்று நேர்முகப் பரீட்சையில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாக அமைச்சரிடம் இந்தப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து, நியமனம் பெறுவதற்குரிய நடைமுறைகளில் பங்குபற்றியவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்களிடம் உறுதியளித்து அதற்கு ஆதாரமாக வடமாகாண ஆளுனருக்குப் பெயர் விபரங்களுடன் எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் வழங்கியிருப்பதாக அமைச்சருடனான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டவர்களில் ஒருவராகிய நடேசன் பார்த்திபன் தெரிவித்தார்.

vavunia_protest

அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய அணி தலைவர் மகேந்திர சிங் டோனி 16வது இடம்..

இந்த வருடத்திற்கான அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் பட்டியலை உலகின் முன்னணி பத்திரிக்கையான போப்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 100 விளையாட்டு வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி 16வது இடத்தை பெற்றுள்ளார்.

இவர் கடந்த வருடம் மட்டும் 31.5 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் 440 கோடி) தொகையை பரிசு மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் பெற்றுள்ளார் என்று போப்ஸ் பத்திரிக்கை கணக்கிட்டுள்ளது.கடந்த ஆண்டு இந்த பட்டியலில் டோனி 31வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் உலகின் தலை சிறந்த கோல்ப் விளையாட்டு வீரர் டைகர் வுட்ஸ் 71.8 மில்லியன் டொலர் தொகையுடன் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் முதல் நிலை டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் உள்ளார்.

இவர் கடந்த ஆண்டு மட்டும் 71.5 மில்லியன் டொலர் சம்பாதித்துள்ளார். 61.9 மில்லியன் டொலருடன் அமெரிக்க கூடைப் பந்தாட்ட வீரர் கோபெ பிரியன்ட் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

 

இலங்கையில் கடல் சீற்றம் 18 படகுகள் கவிழ்ந்தன.. பலரை காணவில்ல.. தெஹிவளையில் பதற்றம்.. நான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்பு..

காலி பலப்பிட்டிய கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 20 மீன்பிடி படகுகளில் 18 படகுகள் கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். நாட்டில் நிலவிவருகின்ற கடும் காற்றுடன் கூடிய மிகமோசமான காலநிலை காரணமாகவே இந்த படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளன என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

பலபிட்டி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 20 படகுகளில் 3 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் பயணித்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாகவும் தத்தளித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு கடலுக்கு சென்ற 20 படகுகளில் 18 படகுகள் கடும் காற்று வீசியமையால் கடலுக்குள் மூழ்கிவிட்டன. அந்த படகுகளில் இருந்த மீனவர்களில் இருவர் கரைக்கு நீந்திவந்து சம்பவத்தை விபரித்துள்ளனர்.

இதனையடுத்தே மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படையினருடன் இணைந்து விமானப்படை ஹெலிக்கொப்டர் ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதேவேளை காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் மூன்று கடற்படை படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடலுக்குச் செல்ல வேண்டாம்

நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவிவருவதால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மன்னார், பொத்துவில், காலி, கொழும்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

மீனவர்கள் போராட்டத்தால் தெஹிவளையில் பதற்றம்

தெஹிவளை பகுதியில் ரயில் வீதியை மறித்து மீனவர்கள் சிலர் போராட்டம் மேற்கொள்வதால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு மீன்பிடிக்கச் சென்ற சில மீனவர்களை மீட்டுத் தருமாறு கோரியே மீனவர்கள் போராட்டம் செய்கின்றனர். இங்கு சிலர் மீன் பிடி படகுகளை ரயில் தண்டவாளத்தில் தரித்துவைத்து ரயில் போக்குவரத்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளதால் ரயில் போக்கவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

நான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்பு

சீரற்ற வானிலையால் காணாமல்போன நான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காலி, பேருவளை, பெந்தோட்டை மற்றும் அஹுங்கல்ல ஆகிய பகுதிகளில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.காணாமல்போயுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு மீனவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விமானப்படை ஹெலிக்கொப்டர்கள் மூலம் மூன்று மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.பேருவளை கடலில் விபத்துக்குள்ளான மீனவர் ஒருவரும் தெஹிவளை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இரண்டு மீனவர்களும் காப்பாற்றப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் எயார் கொமடோ அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

ஆறு மீனவர்களுடன் தெஹிவளை கடற்பரப்பில் படகொன்று உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பில் ஆராயும் நடவடிக்கையை விமானப்படை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான மீனவர்களை காப்பாற்றுவதற்காக ஜய சாகர என்ற கப்பலை ஈடுபடுத்தியுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

பேருவளை, மொரட்டுவை, தெஹிவளை ஆகிய கடற்பரப்புக்களில் விபத்துக்குள்ளானதாக கூறப்படும் படகுகளில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்காக நந்திமித்திர மற்றும் சயுர கப்பல்கள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

படங்கள் 

m4

m1

m2

m5

m6

m7