கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 20 ஓவர் உலக கிண்ணம் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன.
இதன்படி 2016ம் ஆண்டு 20 ஓவர் உலக கிண்ண போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி 2021-ம் ஆண்டு இந்தியாவில் இடம்பெறவுள்ளது.
இதேபோல், நான்காவது முறையாக 50 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தும் வாய்ப்பும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
லண்டனில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் 2015 – 2023 வரையிலான உலகளாவிய போட்டிகள் குறித்த அட்டவணையில் இந்தியாவுக்கு இந்த சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது.
எனக்கு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. நான் ஏன் கௌதமியை அம்மா என்று அழைக்க வேண்டும் என ஸ்ருதி ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கமல் ஹாசன், சரிகாவின் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா. இந்தநிலையில் கமல், சரிகா விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு கமல் நடிகை கௌதமியுடன் ஒரே வீட்டில் வாழ்கிறார்.
இந்தநிலையில் இது குறித்து ஸ்ருதி கூறுகையில்,
பிரிந்து செல்ல வேண்டும் என்பது என் பெற்றோரின் சொந்த விஷயம். அதனால் அது குறித்து நான் பேச விரும்பவில்லை. எனக்கு என் பெற்றோரின் சந்தோஷம் தான் முக்கியம். அவர்களே சந்தோஷமாக பிரிந்துவிட்டதால் எனக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை. என் தாய் மற்றும் தந்தையுடன் எனக்கு நல்ல நெருக்கம் உள்ளது.
இருப்பினும் என் தாயுடன் தான் அதிக நெருக்கம். நாங்கள் தோழிகளுக்கும் மேல் என்றார். நீங்கள் கௌதமியை அம்மா என்று அழைப்பீர்களா என்று கேட்டதற்கு,
நான் ஏன் அப்படி கூப்பிடணும். எனக்கு ஒரு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. என் தந்தை கௌதமியுடன் இருப்பதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.
வவுனியா, சுந்தரபுரம் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பாங்கான பகுதியில் உருக்குலைந்த நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர்.
வவுனியா, சுந்தரபுரம் காட்டுப்பகுதியில் சடலம் ஒன்றைக் கண்ட கிராமவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து இந்தச் சடலத்தை மீட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
4ஆம் வட்டாரம் சுந்தரபுரத்தைச் சேர்ந்த ஜேமிஸ் ஜேசுதாசன் (வயது 63) என்பவரின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் கடந்த வாரம் வீட்டில் முரண்பட்டுக்;கொண்டு சென்றிருந்ததாக விசாரணையிலிருந்து தெரியவருவதாகவும் பொலிஸார் கூறினர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பை எதிரித்து மதிமுக பொதுச் செயாளர் வைகோ மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த தடை நீட்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்தது. இந்த தடை நீட்டிப்பு சரி தானா என்பது குறித்து ஆய்வு நடத்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.
அந்த தீர்ப்பாயம் டெல்லி, சென்னை, ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி தடை நீட்டிப்பு சரி தான் என்று 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை ஒரு ஆண்டுக்கு முன்பே முடிந்தாலும் தீர்ப்பு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி எலிபி தர்மாராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோர் இன்று (01) வழங்கினர்.
அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரி தான் என்ற தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் தவறு ஒன்றும் இல்லை.
அதனால் வைகோ மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் அமுக்கி வைத்துக் கொள்வார்கள் அந்தவகையில் வழமையாக எழுத்துக்களால் விதைக்கப்பட்டவை சில காட்சிகளால் நகைச்சுவையுடன் விபரித்துள்ளது தான் “துலைக்கோ போறியள்“ என்ற இக்குறும்படமாகும்.
இத்தலைப்பானது எமது பிரதேசங்களில் மிகவும் அருகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பேச்சு மொழியாகும். ஒருவர் போய்க் கொண்டிருக்கும் போது “எங்கே போகிறீர்கள்“ என்பது ஒரு அபசகுணமாககக் கருதப்படுவதால் இப்படி அழைத்து வினாவுவார்கள்.
உடுப்பிட்டி நாவலடி, நெல்லியடி, நவிண்டில், வதிரி போன்ற 5 களங்களில் உருவாக்கப்பட்ட 8 காட்சிகளுடன் இக்குறும்படம் உருவாக்கம் பெற்றுள்ளது.
இக்குறும்படத்திற்கான திரைக்கதை, வசனத்தை வலைப்பதிவரும் எழுத்தாளருமான ம.தி.சுதா எழுதி இயக்க முக்கிய பாத்திரங்களாக ஜெயதீபன், ஏரம்பு, செல்வம், செல்லா மற்றும் சுதேசினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவை செல்லா அவர்கள் மேற்கொள்ள படத் தொகுப்பை கே.செல்வமும் இசையை அற்புதனும் வழங்கியிருக்கிறார்கள். குறும்படத் தயாரிப்பை ரஜிகரன் மேற்கொள்ள படத்திற்கான பட வடிவமைப்புக்களை மதுரன் அமைத்திருக்கிறார்.
படம் தொடர்பான பணிகள் முடிவடைந்துள்ள போதும் வரும் மாதம் நடுப்பகுதியில் இக்குறும்படம் வெளியிடப்பட இருக்கிறது.
வவுனியா பூந்தோட்டம் சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் காயமடைந்தனர். முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் ஒருவர் பூந்தோட்டத்தைச் சேர்ந்த பிரசன்னா எனவும் மற்றொருவர் பூந்தோட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் எனவும் தெரியவருகிறது.
காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
பொலிவியா மக்கள் பாவனை முடிந்ததும் குப்பையில் வீசப்படும் தண்ணீர் குளிர்பான போத்தல்களைக் கொண்டு வீடு கட்டுகிறார்கள். தென் அமெரிக்க நாடான இயற்கை வளங்கள் நிறைந்த பொலிவியாவில் 50 சதவீதமான மக்கள் ஏழைகளாக உள்ளனர். அவர்களால் கல்லினால் வீடுகள் கட்டுவது என்பது முடியாத விடயமாக உள்ளது.
இதனால் கல்லிற்கு மாற்றீடாக குப்பையில் கிடைக்கும் வெற்றுப் போத்தல்களில் மண்ணை நிரப்பி வீடு கட்ட ஆரம்பத்துள்ளனர். பொலிவியாவில் உள்ள சாண்டா குரூஸ் நகரில் வசித்து வரும் இன்கிரிட் வாகா டியாஸ் என்ற பெண்மணியே இந்த புதுவிதமான மாற்றீடினை கண்டுபிடித்துள்ளார்.
பாவித்துவிட்டு குப்பைகளில் வீசப்படும் பழைய பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்து கட்டிடங்களை கட்ட ஆரம்பித்துள்ளார்.இதனையடுத்து பலரும் இம்முறையில் வீடு கட்டும் முயற்சியை ஆரம்பித்துள்னர்.
தற்போது பொலிவியாவில் மட்டும் இதுவரையில் பத்துக்கும் அதிகமான வீடுகளை பிளாஸ்டிக் போத்தல்களால் குறைந்த செலவில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.இத்திட்டம் வெற்றிபெற்றுள்ளமை தனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார் வாகா.
ஆம்! வீடு கட்டுவதற்கு கல் மட்டுமல்ல- சிமெந்து மணல் போன்ற மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாட்டை போக்குவதற்கு இந்த பிளாஸ்டிக் போத்தல் வீடமைப்பு முறை மிகவும் சிறந்தது தான் .எவ்வித செலவுமின்றி மிகவும் சுலபமாகவே வீட்டைக் கட்டலாம். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
திரையுலகிற்கு ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு நடித்து வரும் புதிய படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பிற்கு ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடந்துள்ளது.
இதில் தெனாலிராமன் கெட்டப்பில் வடிவேலு நடித்த முதல் காட்சியை படமாக்கினர்.
இக்காட்சியில் அவருக்கு 42 மனைவிகளும், 56 பிள்ளைகளும் இருப்பது போன்று கதாபாத்திரங்களை வைத்து படமாக்கி உள்ளனர்.
குறிப்பாக இப்படத்திற்காக பிரத்யேக பயிற்சிகளை எடுத்துக் கொண்ட வடிவேலு, தன் அம்மாவை பார்ப்பதற்காக மதுரைக்கு சென்று விட்டாராம்.
HIV கிருமித் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான புதிய வழிகாட்டு விதிகளை உலக சுகாதாரக் கழகம் அறிமுகப்படுத்துகிறது.
எய்ட்ஸ் நோயால் ஏற்படக்கூடிய லட்சக்கணக்கான உயிரிழப்புகளைத் தவிர்க்க இந்த புதிய விதிமுறை உதவும் என அவர்கள் அது தெரிவிக்கிறது.
ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்ட ஆரம்பத்தில் அதாவது நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே மூன்று மருந்துகளை ஒன்றாக சேர்த்துச் செய்த மாத்திரை ஒன்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என உலக சுகாதாரக கழகம் பரிந்துரைக்கிறது.
வளர்ந்துவரும் நாடுகளில் HIV கிருமித் தொற்று ஏற்பட்டு எய்ட்ஸ் நோய் தாக்கம் வருவதைத் தள்ளிப்போட மருந்து சாப்பிடுகின்ற நபர்களின் எண்ணிக்கையை ஒரு கோடியே அறுபது லட்சத்திலிருந்து இரண்டு கோடியே அறுபது லட்சமாக இந்த புதிய மருத்துவ முறை அதிகரிக்கும்.
ஆனாலும் விலை மலிவான சிகிச்சையாகவே இந்த புதிய மருத்துவமுறை அமையும் என உலக சுகாதாரக் கழகம் நம்புகிறது. மலேசியாவில் ஆரம்பிக்கும் உலக எய்ட்ஸ் மாநாட்டில் இந்த புதிய மருத்துவ முறைக்கான பிரச்சாரம் ஆரம்பிக்கும்.
மேற்கிந்தியா, இலங்கை, இந்தியா ஆகிய 3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில நடந்து வருகிறது. இதில் நேற்று கிங்ஸ்டனில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- மேற்கிந்திய அணிகள் மோதின.
மேற்கிந்திய தீவுகள் அணியின் தற்காலிக தலைவர் வெய்ன் பிராவோ காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். தலைவர் பதவியை பொல்லார்ட் கவனித்தார். நாணய சுழற்சியைவென்ற மேற்கிந்திய அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஏமாற்றம் அளிக்கும் வகையில் 10 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கெமார் ரோச் பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடத்து ஆட்டம் இழந்தார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களை பெற்றது. 230 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 47.4 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்த்து.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ஜொன்சன் சார்ள்ஸ் 97 ஓட்டங்களையும் பிராவோ 55 ஓட்டங்களையும் பெற்றனர். ஆட்ட நாயகனாக ஜொன்சன் சார்ள்ஸ் தேர்வு செய்யப்பட்டார்
உணவுக்காக ஒரு குரங்கை அடிக்கிறது ஒரு சிறுத்தை, அடித்த பிறகு தான் தெரிகிறது அதன் அடிமடியில் அன்று பிறந்த அதன் குட்டி ஒன்று! ஒரு தாயை கொன்றுவிட்டோமே, குட்டியை அநாதை ஆக்கிவிட்டோமே என்ற வேதனை பசியை மறக்கசெய்கிறது. ஒரு தாயாக குட்டி குரங்கை அரவணைக்க முயல்கிறது.
செய்த பாவங்களுடன் குற்ற உணர்வே இல்லாமல் திரியும் மனித ஜென்மங்களுக்கு இந்த விலங்குகளே மேல் என்று தோன்றுகிறது.
நடிகர் விஜய் சேதுபதி முன்பு போல் யாரிடமும் சகஜமாக பேசுவதில்லை. அத்துடன் இவர் அடிக்கடி செல்போன் நம்பரை மாற்றி விடுகிறார்.
“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்திற்கு கையடக்க காலண்டர் அடித்துக் கொண்டு கோலிவுட் வீதிகளில் அகப்படுபவர்களிடமெல்லாம் அன்பொழுக பேசி அந்த காலண்டரை கையில் திணித்து இந்த வருஷம் நம்ம வருஷமாக வாழ்த்துங்கள் என ஆசி பெற்ற விஜய் சேதுபதியா இது..?
இவ்வாறு அவரது மாற்றம் கண்டு மூக்கின் மேல் விரல் வைப்பவர்களின் கனிவான கவனத்திற்கு.. :
“தென்மேற்கு பருவக்காற்று” படத்தை தொடர்ந்து அவர் நடித்த “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்”, “பீட்சா”, “சூது கவ்வும்” உள்ளிட்ட படங்களின் ஹாட்ரிக் வெற்றி தானே அப்புறம் இவருக்கு எப்பிடி இவ்வளவு கடன்..?
ஆம்..சில வருடங்களுக்கு முன், காலம் தவறிய விஜய் சேதுபதியின் அப்பாவும் அவர் வாங்கிய கடன்களும் தான் காரணமாம்.
விஜய் சேதுபதியிடம், “அப்பா கொஞ்சம் பணம் தரணும் தம்பி” என கையில் அத்தாட்சியுடனும், அத்தாட்சி, தகுந்த சாட்சி எதுவும் இல்லாமலும் நிறைய பேர் வீட்டு வாசலில் கியூ கட்டி நிற்காத குறையாக வந்து போக ஆரம்பித்து விட்டனராம்.
சென்னை வடபழநி பகுதியில் கன்ஸ்ட்ரக்ஷன் பிசினசில் சில பல லட்சங்கள் நஷ்டப்பட்டு போன விஜய் சேதுபதியின் அப்பா சிலரிடம் கடன்பட்டிருந்தது உண்மைதான்.
என்றாலும் ஆளாளுக்கு என்று வந்து நின்றதில் மனிதர் விக்கித்துப் போய்விட்டாராம், அதன் விளைவுதான், விஜய் சேதுபதியின் போக்கில் இப்படி நிறைய மாற்றங்கள் என்கிறது விவரமறிந்த வட்டாரம்..!
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் (ஈ.பி.ஆர்.எவ்.எவ்) அனுஷ்டிக்கப்பட்டுவரும் தியாகிகள் தின 23ஆவது ஆண்டு நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நேற்று (30) இந்நிகழ்வு இடம்பெற்றது.
தியாகிகள் தின நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் முன்னாள் செயலாளர் நாயகம் அமரர் க.பத்மநாபாவின் உருவப் படத்திற்கு மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.
தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது.
பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றன.
இதன்படி வீ.ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சர்வேஸ்வரன், குலசேகரம் என பலரும் அஞ்சலி உரையாற்றினர்.
இந்நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச, நகர சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் என பெருந்தொகையானோர் பங்கேற்றிருந்தனர்.
பாடசாலை அதிபர்களுக்கு இராணுவ பயிற்சி கொடுக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை அதிபர் ஒருவர் நேற்று (30) காலை உயிரிழந்த நிலையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி ரந்தம்பை என்னுமிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவப் பயிற்சிநெறியில் உடற்பயிற்சிக்காக காலையில் 2 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்ற நியதிக்கமைய,
நேற்று காலை நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அதிபர் திடீர் சுகவீனமுற்று வைத்தியாசலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.
உயிரிழந்த 52 வயதான டபிள்யு.ஏ.எஸ். விக்கிரமசிங்க, ரத்தெலுகம பஞ்ஞானந்த தேசிய பாடசாலையின் அதிபர்.
அதிபர் உயிரிழந்தமைக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்கவேண்டும் என்று ஆசியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
பாடசாலை அதிபர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இராணுவ பயிற்சி வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த இலங்கை ஆசிரியர் சங்கம், இந்த சம்பவத்துடனாவது இந்தப் பயிற்சியை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயற்சி என்ற பெயரில், அரசு இராணுவ தர பயற்சி வழங்கிவருகிறது.
இதே மாதிரியான திட்டத்தின்கீழ், பாடசாலை அதிபர்களுக்கும் இராணுவ பயிற்சி வழங்கி கப்டன், லெப்டினன், லெப்டினன் கேர்ணல் என்ற தரத்திலான படிநிலைகளையும் அரசு வழங்கிவருவதாகவும் ஆசிரியர் சங்கம் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
உகண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள முக்கிய சாலை வழியாக பெட்ரோல் ஏற்றிய லொறி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கார் லொறியின் மீது மோதியது.
உடனே லாரியில் இருந்து வழிந்தோடிய பெட்ரோலை வழித்தெடுக்க ஒரு கூட்டத்தினர் சம்பவ இடத்தை நெருங்கினர். அப்போது தீடீரென அந்த லொறி தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் எண்ணெய் சேகரிக்க வந்தவர்கள் உள்பட 29 பேர் தீயில் கருகி பலியாயினர்.
பாதிக்கப்பட்ட20-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 20 மேற்பட்ட மோட்டர் சைக்கிள்கள் எரிந்து சாம்பாலாயின. மூன்று பக்கங்களிலும் ருவாண்டா, புரூண்டி, டி.ஆர். காங்கோ ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ள உகாண்டாவின் கம்பாலா நகரம் முக்கியப்பகுதியாக விளங்குகிறது.
ஆபிரிக்க நாடுகளில் எண்ணெய் லாரிகள் விபத்துக்குள்ளாகும் போது வழிந்தோடும் எண்ணெயை சேகரிக்க வரும் மக்கள் இதுபோன்று பாதிப்புக்கு உள்ளாவது அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்றாகும்.
சரிந்து கொண்டிருக்கும் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த அதிரடியான முடிவை எடுத்துள்ளாராம் விமல்.
கூத்துப் பட்டறையில் இருந்து வந்த விமல் மற்றும் விதார்த்தின் மார்க்கெட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
ஆனால் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டோ எகிறிக் கொண்டிருக்கிறது.
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நானும் தானே நடித்தேன். அப்படி இருக்கையில் இந்த சிவகார்த்திகேயனுக்கு மட்டும் எப்படி பெயர் கிடைத்தது என்று புலம்பித் தள்ளுகிறாராம் விமல்.
இதனால் இனி கண்ட கம்பெனிகளின் படங்களில் எல்லாம் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளாராம்.
ஆண்டுக்கு 2 படங்கள் அதுவும் பெரிய இயக்குனர், பெரிய நிறுவனத்தின் படங்களில் மட்டும் தான் நடிப்பது என்று தீர்மானித்துள்ளாராம்.
தேசிங்கு ராஜா படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகராக விமல் நடித்துள்ளார். இந்த படம் தனக்கு நிச்சயம் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம்.