இந்திய எல்லையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் ரோந்து சென்ற 5 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றதையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது. இருதரப்பு ராணுவமும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். அதே சமயம் தங்கள் வீரர்கள் இரண்டு பேரை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இதன் காரணமாக இரு நாட்டு உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், 337 இந்திய கைதிகளை பாகிஸ்தான் அரசு இன்று விடுதலை செய்தது. கராச்சியின் மாலிர் சிறையில் இருந்த 329 கைதிகளும், லண்டியில் உள்ள சிறார் சிறையில் இருந்த8 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிந்து மாகாண உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாலிர் சிறையில் உள்ள ஒரு இந்திய கைதி, இந்தியாவைச் சேர்ந்தவர்தான் என்பதை உறுதி செய்யாததால் அவரை விடுதலை செய்ய முடியவில்லை என்று சிறை சூப்பிரெண்டு ஷுஜா ஹைடர் தெரிவித்தார். விடுதலை செய்யப்பட்ட கைதிகள் 8 ஏ.சி. பஸ்களில் லாகூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மறறும் பணத்தை அரசு கொடுத்துள்ளது. அவர்கள் அனைவரும் நாளை வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் ஹைடர் கூறினார்.
விடுதலை செய்யப்பட்ட இந்திய கைதிகளில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள். இவர்கள் பாகிஸ்தான் கடற்பகுதியில் மீன்பிடித்தபோது கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் தண்டனைக் காலம் முடிந்ததும் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் டோக்கியோவில் இளவயது தொழில் முனைவோரான ஒரு பெண் தன்னத்தானே கட்டிப் போட்டுக் கொண்டு வீட்டில் அபாயகரமான நிலையில் மீட்கப் பட்டார். காரணம் அவருக்கு வேலைக்குச் செல்ல விருப்பம் இல்லாததே.
ஜப்பான் ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட்டன. 20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், தலைநகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், கடந்த திங்கள் அன்று தன் கால்களையும் கைகளையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு, அபாயகரமான நிலையில் இருந்துள்ளார்.
அடுக்குமாடிக் குடியிருப்பின் உரிமையாளர் இதைக் கண்டுவிட்டு, போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளார். போலீஸார் அம்புலன்ஸை வரவழைத்து, பெண்ணைக் காப்பாற்றினர்.
அப்போது அந்தப் பெண்ணைக் கட்டிப் போட்டு வீட்டில் ஏதேனும் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் போலீஸார் வீட்டை முழுவதுமாக சோதனையிட்டனர். ஆனால் அவ்வாறு எதுவும் தெரியவில்லை. எனவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சுய நினைவு திரும்பிய அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அதில், அந்தப் பெண், அன்றைய தினம் தனக்கு வேலைக்குச் செல்ல விருப்பம் இல்லை என்றும் முன்னறிவிப்பு அளிக்காமல் விடுப்பு கிடைப்பதற்கு வேறு வழி தெரியாமல் இவ்வாறு செய்ததாகவும் தெரியவந்தது. இருப்பினும் அந்தப் பெண்ணின் நிலையைக் கருதி அவர் மீது எந்த நடவடிக்கையும் போலீஸார் மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது
ஓடும் ரயிலில் பாய்ந்து ஏற முற்பட்ட இளைஞர் ஒருவர் தடுக்கி விழுந்ததில் ரயில் சில்லினால் அவரது கை துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று மாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெற்றது.
கொழும்பு – வவுனியா ரயிலில் ஏற முற்பட்ட போதே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் வண்டி பயணிகள் ஏறுவதற்காக நிறுத்தப்படுவதற்கு முன்பே குறித்த இளைஞர் ஓடிச் சென்று ரயிலில் ஏற முற்பட்டுள்ளார்.
சம்பவத்தில் குறித்த இளைஞனின் கை வேறாக துண்டிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள் பொலிஸாரின் உதவியுடன் காயமடைந்த இளைஞனையும் துண்டிக்கப்பட்ட கையினையும் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.
வவுனியா ஈஸ்வரிபுரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி தொடர்ந்தும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,வவுனியா ஈஸ்வரிபுரத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் உறவினரொருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து எனக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வவுனியா பொலிஸாரும் இச்சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக முக்கிய தரகர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இது தொடர்பாக டெல்லி மற்றும் மும்பை பொலிசார் பலரை கைது செய்தனர். டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்ட முக்கிய தரகர் சந்திரேஷ் ஜெயினிடம் விசாரணை நடத்த மும்பை பொலிசார் முடிவு செய்தனர்.
இதனையடுத்து நீதிமன்றத்தின் அனுமதிப்படி, மும்பைக்கு அழைத்து வரப்பட்ட ஜெயினிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் பின்பு ஜெயினை மும்பை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சூதாட்ட வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.
திருமணத்துக்கு முன்பு உடலுறவு வைத்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்ட 15 வயதான மாலைதீவு பெண்ணுக்கு உத்தரவிடப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் பெண் வேறோரு ஆணோடு உடலுறவு கொண்டதாக சிறார் நீதிமன்றம் கண்டறிந்தது தவறு என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக இப்பெண்ணுடைய தாயின் கணவன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்வது மாலைதீவில் சட்ட விரோதமானது ஆகும்.
இந்தப் பெண்ணுக்கு 100 சவுக்கடி கொடுக்குமாறு கொடுக்கப்பட்ட தீர்ப்பை கடுமையாக சாடியிருந்த அம்னெஸ்ட்டி இன்றைய தீர்ப்பை வரவேற்றுள்ளது. திருமணத்துக்கு வெளியே உறவு கொண்டார்கள் என்பதற்காக யாரும் தண்டிக்கப்படக் கூடாது என அம்னெஸ்ட்டியின் ஆசிய பசிபிக் வட்டகை இயக்குனர் பாலி டிரஸ்காட் கூறியுள்ளார்.
சவுக்கடி கொடுப்பத்து கொடூரமானது மனிதத் தன்மையற்றது, சிறுமைப்படுத்துவது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பாலியல் வல்லுறவுக்குப் பிறகு கடுமையான மனஅழுத்தத்தில் இருந்தபோது, அவரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அந்தப் பெண் 18 வயதை அடைந்தவுடன் சவுக்கடி வழங்கப்பட வேண்டும் என்று சிறார் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சர்வதேச கண்டனங்கள் எழுந்த நிலையில் அத்தீர்ப்புக்கு எதிராக மாலைதீவு அரசு பெப்ரவரியில் மேன்முறையீடு செய்தது.
இந்த தீர்ப்பு குறித்து மாலைதீவு அதிபர் முகமது வாகீத் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சட்டரீதியான காரணங்களால் அந்தப் பெண்ணின் பெயரை வெளியிட முடியாது. அந்தப் பெண் மற்றொரு ஆணுடன் சுயவிருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டிருந்ததாக காவல்துறை விசாரணைகளின்போது தெரியவந்தது.
நாட்டின் வடக்கேயுள்ள ஒரு தீவில் சிறிய குழந்தையின் உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்தது. அந்தப் பெண்ணை அவருடைய தாயின் கணவனே வன்புணர்ச்சி செய்தார் என்றும், அப்பெண்ணுக்குப் பிறந்த குழந்தையை அவர் கொன்றார் என்றும் தற்போது காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
கிரிக்கெட்டின் சாதனை சிகரம் என்று அழைக்கப்படும் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு தள்ளப்பட்டதற்கு நானே காரணம் என்று பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் கிண்டல் செய்துள்ளார்.
அவர் அளித்த ஒரு பேட்டியில்,
டெண்டுல்கர் ஒரு சூப்பர் ஸ்டார். கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் ஓட்டங்களை குவித்துள்ளார். 2011ம் ஆண்டு உலக கோப்பை அரைஇறுதியில் தெண்டுல்கரின் (85 ஓட்டங்கள்) விக்கெட்டை நான் தான் வீழ்த்தினேன். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகும்.
அதன் பிறகு 2012ம் ஆண்டு மார்ச் 18ம் திகதி நடந்த ஆசிய கிண்ண கிரிக்கெட்டிலும் அவரது விக்கெட்டை (52 ஓட்டங்களில்) நான் தான் கைப்பற்றினேன். ஒரு நாள் போட்டியில் இது தான் அவரது கடைசி ஆட்டமாகும்.
இந்த போட்டியில் அவர் துஸ்ரா வகை பந்து வீச்சில் தடுமாறினார். உடனே மிஸ்பா உல்ஹக் என்னிடம், அவரை ஸ்லிப்பில் பிடி எடுத்து தூக்கி விடலாம் என்று கூறினார். இதையடுத்து யூனிஸ்கான் ஸ்லிப் பீல்டிங்குக்கு மாற்றப்பட்டார் எங்களது திட்டப்படியே உலகின் தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரரான அவர் ஸ்லிப்பில் விக்கெட்டை இழந்தார்.
இது போன்ற எனது சிறந்த பந்து வீச்சே அவரை ஒரு நாள் போட்டியில் இருந்து வெளியேற நிர்ப்பந்தப்படுத்தியது என்றார்.
இந்திய ராஜஸ்தான் மாநிலத்தில் 3 வயது மகளை தந்தை கற்பழித்த கொடூரம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள நஹர்கார் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். கூலித் தொழிலாளி.
அவருக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். நேற்று முன்தினம் இரவு அவரது மனைவி தூங்கிக் கொண்டிருந்தபோது கணேஷ் மகளை வீட்டுக்கு வெளியே தூக்கிச் சென்றார்.
மகள் என்றும் பாராமல் அவர் அந்த சிறுமியை கற்பழித்துவிட்டு வீட்டுக்கு வெளியே போட்டுவிட்டு சென்றார். நேற்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் காயப்பட்டு கிடந்த சிறுமியை ஜே.கே லோனே மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் காலையில் எழுந்தபோது மகளைக் காணாமல் கணேஷின் மனைவி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் கணேஷிடம் விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் 46 பேரை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அவுஸ்திரேலியா காலவரையின்றி தடுத்துவைத்திருப்பது, கொடூரமான, மனிதத் தன்மையற்ற, இழிவுபடுத்தும் விதமான செயல் என்று ஐநா சபை குற்றம் சாட்டியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் இந்தச் செயல் காரணமாக தடுத்துவைக்கப்பட்டவர்கள் கடுமையான உளவியல் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று இவர்களது வழக்குகளை பரிசீலித்த ஐநா குழுவொன்று கண்டறிந்துள்ளது.
குறைந்தது இரண்டரை ஆண்டுகள் காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்தத் அகதிகளை அவுஸ்திரேலியா உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அவர்களுக்கு நஷ்டஈடும் புனர்வாழ்வும் அளிக்க வேண்டும் என ஜெனீவாவிலிருந்து இயங்கும் மனித உரிமைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைத் தமிழர்கள் 42 பேர், மியன்மாரிலிருந்து சென்ற ரோஹிஞ்சாக்கள் 3 பேர், குவைத் பிரஜை ஒருவர் ஆகியோர் அடங்கிய இந்த அகதிகள் தாங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளது தொடர்பில் ஐநா மனித உரிமைக் குழுவிடம் முறையிட்டிருந்தனர்.
தடுத்துவைக்கப்பட்டதை எதிர்த்து அவுஸ்திரேலிய நீதிமன்றங்களில் வழக்கு தொடர தங்களுக்கு வழியில்லாமல் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இவர்களை அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியாது. ஆனால் அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டால் இவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவார்கள் என்று கருதப்பட்டு குடிவரவுத்துறையின் தடுப்புக்காவல் மையத்திலேயே இவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அகதிகள் தடுத்துவைக்கப்பட்டது எதேச்சதிகாரமான செயல் என்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்பாட்டின் 9ஆம் சரத்தை மீறும் செயல் என்றும் சுயாதீன மனித உரிமை நிபுணர்கள் 18 பேர் அடங்கிய ஐ.நா குழு கண்டறிந்துள்ளது.
2009 மார்ச் மாதத்துக்கும் 2010 டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருந்த இந்த தஞ்சக் கோரிக்கையாளர்களில் பெரும்பான்மையானோர் முதலில் கிறிஸ்துமஸ் தீவில் இறங்கியிருந்தவர்கள்.
இவர்களில் ஐந்து பேர் கடலில் இருந்து மீட்கப்பட்டு முதலில் இந்தோனேஷியாவில் கரைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டுவரப்பட்டவர்கள்.
தாம் ஏன் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறோம் என்று தமக்குத் தெரிவிக்கப்படவில்லை எனவும், அவுஸ்திரேலிய நீதிமன்றங்களில் தமது தடுப்புக்காவலை எதிர்த்து மறுஆய்வு மனு தொடுக்கும் சட்ட வழிமுறைகள் தமக்கு இல்லை என்றும் இந்த அகதிகள் ஐநா மனித உரிமைக் குழுவிடம் முறையிட்டிருந்தனர்.
தடுத்துவைக்கப்பட்டவர்களில் ஏழு பேர் மட்டும் விடுவிக்கப்பட்டு, அவுஸ்திரேலிய சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் என ஐநாவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மெட்ராஸ் கபே படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுத்து விட்டனர். இதனால் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் இப்படம் இன்று ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்தியில் தயாரான இப்படத்தை தமிழிலும் டப்பிங் செய்துள்ளனர்.
தமிழ் பதிப்புக்கு தணிக்கை குழுவினர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. மெட்ராஸ் கபே படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாக தமிழ் அமைப்பினர் எதிர்த்தனர். இதையடுத்து இரு தினங்களுக்கு முன் பிரத்யேகமாக படத்தை அவர்களுக்கு திரையிட்டு காட்டினர். படம் பார்த்த சீமான், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் முழுக்க தமிழர்களுக்கு எதிரான படம் இது என கொந்தளித்தனர்.
விடுதலைப்புலிகள், ஈழத்தமிழர்களை மட்டுமே படத்தில் கொச்சைப்படுத்தி உள்ளனர் என்றும், சிங்களர்கள் பற்றியோ, இலங்கை ராணுவத்தினர் தமிழர்களை கொன்று குவித்தது பற்றியோ எந்தவொரு காட்சியும் இடம் பெறவில்லை என்றும் அவர்கள் கூறினர். இந்தியா முழுவதும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வைகோ வற்புறுத்தினார். மீறி திரையிட்டால் தியேட்டர்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.
இந்த நிலையில் மதுரை உயர் நீதிமன்றத்தில் மெட்ராஸ் கபே படத்துக்கு தடை விதிக்க கோரி வக்கீல் பி.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் ராஜேசுவரன், மதிவாணன் ஆகியோர் விசாரித்தனர். படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வக்கீல் டி.ஆர்.ராஜா கோபால் இலங்கையில் நடந்த உண்மையான சம்பவத்துக்கும், படத்தில் கூறப்பட்டுள்ள கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றார்.
நீதிபதிகள் படத்தை வெளியிட தடை எதுவும் விதிக்கவில்லை. இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. மத்திய திரைப்பட தணிக்கை குழு ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
விசாரணையை அடுத்த மாதம் 3ம் திகதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் நேற்று மாலை சென்னையில் அவசர கூட்டம் நடத்தினார்கள். சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். மெட்ராஸ் கபே படத்தை திரையிடுவதா, வேண்டாமா என்பது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என்று பன்னீர் செல்வத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட போது ‘‘மெட்ராஸ் கபே படத்தை திரையிடுவதா வேண்டாமா அந்தந்த திரையரங்க உரிமையாளர்களே முடிவு செய்து கொள்ளலாம்’’ என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.
திரையரங்க அதிபர் ஒருவர் கூறும் போது ‘‘மெட்ராஸ் கபே படத்தை திரையிடக்கூடாது என தமிழ் அமைப்புகள் எதிர்த்து உள்ளன. முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளனர். தியேட்டர்களுக்கு இது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம்’’ என்று கூறினார். தியேட்டர் முகப்புகளில் வைக்கப்பட்டு இருந்த மெட்ராஸ் கபே பட பேனர்களும் அகற்றப்பட்டு விட்டன.
வேலூர் சிறை அதிகாரிகள் நன்னடத்தை சான்று வழங்காததால் நடிகர் சீனிவாசன் டெல்லி திகார் சிறையில் இருந்து, ஜாமினில் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்த தொழில் ஓட்டல் அதிபர் ரங்கநாதனிடம் 50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட நடிகர் சீனிவாசன் வாங்கிய கடனை கொடுக்காமல் ஏமாற்றியதால் கடந்த ஏப்ரல் 26ம் திகதி வேலூர் சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக, டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரிடம் ஐந்து கோடி ரூபாய் மோசடி செய்த நடிகர் சீனிவாசனை, டெல்லி போலீசார் கடந்த ஜூன், 4ம் திகதி அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைத்தனர்
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பதிவு செய்யப்பட்ட ஆறு வழக்குகளில் இருந்து ஜாமினில் விடுவிக்க, பிணயத் தொகை செலுத்தி உள்ளனர். இந்த ஆவணங்கள், டெல்லி போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
டெல்லி வழக்கிலும், ஜாமின் பெற முயற்சி நடக்கிறது. வேலூர் சிறையில் இருந்த போது, அவருக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கினால் தான் திகார் சிறையில் ஜாமின் கிடைக்கும்.
இதனால் வேலூர் சிறையில் நன்னடத்தை சான்றிதழ் வாங்க முயற்சி நடந்தது. சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால், திகார் சிறையில் இருந்து பவர்ஸ்டார் சீனிவாசன் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பவருக்கு ஜாமீன் கிடைக்கும அல்லது திகார் சிறை வாழ்க்கை 100 நாட்களை தாண்டிவிடுமா என்பது வேலூர் அதிகாரிகளின் கைகளில்தான் உள்ளது என்கின்றனர் அவரது ரசிகர்கள்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் ஆகிய வெற்றி படத்திற்குப்பின் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தில் சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, பரோட்டா சூரி போன்றோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இசை இமான். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திக்கேயன் சொந்த குரலில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த மாதம் 6ம் திகதி படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் படக்குழுவினர் சந்தோசத்தில் உள்ளனர்
யுடிவி மோஷன் பிக்சர்ஸ், தி வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கு புறம்போக்கு என பெயரிட்டிருக்கின்றனர். இயற்கை, பேராண்மை படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இந்த படத்தை இயக்குகிறார்.
ஆர்யா, விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களைத் தவிர மூன்றாவதாக இன்னொரு நாயகனும் நடிக்கப் போகிறார். கதாநாயகியர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
புறம்போக்கு என தலைப்பா என ஆச்சர்யத்துடன் கேட்பவர்களுக்கு, அதற்கான காரணத்தை சொல்கிறார் இயக்குனர் ஜனநாதன்.
புறம்போக்கு என்ற வார்த்தையை எல்லோரும் கொச்சையாகப் பேசுகிறார்கள். இந்த சொல் பற்றி மேலோட்டமான புரிதல் உள்ளது.
ஆனால் புறம்போக்கு என்கிற சொல் ஆழமான வரலாற்று ரீதியான பொருள் கொண்டது. வாழ்வியலின் அடிப்படையிலான கருத்தை உள்ளடக்கியதாகும். மக்கள் தேவைக்காக இருந்த பொது இடமான புறம்போக்கு நிலங்கள் இன்று மெல்ல மெல்ல தனியாரின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி வருகிறது.
அதைப் பற்றிய பின்னணியை கொண்ட சிந்தனைதான் இப்படம். புறம்போக்கு என்று இனியாரும் ஏளனமாக கேலியாகப் பேசவேண்டாம்.
மலை, பனிச்சிகரங்கள், ஆறு, சர்வதேச கடல்பரப்பு, காற்று, ஒளி, நிலவொளி மட்டுமல்ல எல்லையற்ற அண்டவெளியும்கூட புறம்போக்குதான். எதுவும் தனியுடைமையல்ல. எல்லாமே பொதுவுடைமைதான் என்று கூறுகிறார்.
இப்படத்தில் உலகப் படங்களில் பணிபுரிந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர். ஏகாம்பரம் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பை இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம், சென்னை ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் அக்டோபரில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. 2014 ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஈழத் தமிழரான ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. இலங்கை அகதிகளான செந்தூரன், ஈழ நேரு, சவுந்தரராசன் ஆகியோரை இலங்கைக்கு நாடு கடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் ஈழ நேருவின் மனைவி, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அம் மனுவில், ஈழநேருவை இலங்கைக்கு அனுப்பினால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதனால் அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதி ஈழ நேருவை இலங்கைக்கு அனுப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுதாரரின் புகார் தொடர்பாக மத்திய, மாநிலஅரசுகள் செப்டம்பர் 27ம் திகதிக்குள் பதில் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் காதலில் விழுவது போல விளையாட்டு உலகிலும் ஒரு புதிய காதல் பூத்துள்ளது.
ஸ்குவாஷ் போட்டியில் கலக்கிக் கொண்டிருப்பவர் சென்னையில் பிறந்தவரான மலையாளத்து தீபிகா பல்லிக்கல்.
இளம் வயதிலிருந்தே புகழுச்சியில் இருக்கும் தீபிகா ஸ்குவாஷ் வீராங்கனைகள் வரிசையில் சர்வதேச அளவில் உச்சத்தில் உள்ளார்.
தீபிகாவின் அழகில் மயங்கிய திரையுலகினர் அவரை நடிக்க வைக்க கடுமையாக போராடிப் பார்த்தார்கள்.
ஏன் நடிகர் சிம்புவே கூட தீபிகாவை அணுகியதாக கூறப்பட்டது. ஆனால் அழகாக சிரித்தபடி அத்தனை அழைப்புகளையும் நிராகரித்து விட்டார் தீபிகா. கிசுகிசுக்கள் எதிலும் சிக்காமல் இருந்த தீபிகா தற்போது தினேஷின் காதல் பந்தில் போல்டாகி விட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் விரர் தினேஷ் கார்த்திக் 21 வயதிலேயே நிகிதா என்பவரை மணந்தார். சின்ன வயது முதலே பழகியவர் நிகிதா. ஆனால் இந்தத் திருமணம் சீக்கிரமே உடைந்து போனது. நிகிதாவுக்கும், இந்திய கிரிக்கெட் அணியில் இருந்த ஒரு வீரருக்கும் இடையே ரகசியத் தொடர்பு இருந்துள்ளதாம். இந்த வீரர் தினேஷின் நெருங்கிய நண்பரும் கூட.
இதனால் அதிர்ச்சியாகிப் போன தினேஷ் மனைவியை விட்டுப் பிரிந்தார். பின்னர் விவாகரத்து செய்து விட்டார். நிகிதாவைப் பிரிந்த பின்னர்தான் அவர் கிரிக்கெட்டில் முழு வீச்சில் ஆர்வம் காட்டினார். பல போட்டிகளில் பட்டையைக் கிளப்பினார். இந்திய அணியில் தற்போது அவருக்கு ஒரு நல்ல இடம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் வைத்து தீபிகாவை சந்தித்துள்ளார் தினேஷ். முதல் பார்வையிலேயே அவர்களுக்குள் ஏதோ புரிந்து போய் விட்டதாம். அதன்பின்னர் அடிக்கடி சந்திக்க நட்பு பூத்து, காதலாகி கணிந்தது.
கடந்த மார்ச் மாதம் பயிற்சிக்காக இங்கிலாந்து போயிருந்தார் தீபிகாவை சந்தித்து இனிய அதிர்ச்சி கொடுத்தார் தினேஷ். பின்னர் சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் ஆடியபோது தினேஷுடன் நிறைய நேரத்தை செலவிட்டுள்ளார் தீபிகா.
தீபிகாவுடன் ஏற்பட்டுள்ள இந்தக் காதலால்தான் தினேஷ் முன்பை விட சிறப்பாக ஆடுவதாக கூறுகின்றனர். தீபிகாவின் காதல் உண்மைதான் என்று அவரது வீட்டார் கூறுகின்றனர். இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி விட்டனராம்.
இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் கூட முடிந்து விட்டதாகவும் சொல்கிறார்கள். திருமணம் எப்போது என்பது இன்னும் முடிவாகவில்லை.