இலங்கை பெண் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அமெரிக்க பிரஜை ஒருவர் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க கிறிஸ்த்தவ பிரஜையான இவர் சவுதியில் இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்து கொண்டு இலங்கை பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்து வந்துள்ளார்.
சவுதியில் வாழ்ந்து வந்த இந்த ஜோடிக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டு தனது மனைவி காணாமல் போனதாக அமெரிக்கர் கூறி வந்துள்ளார்.
ஆனால் குழாய் ஒன்றில் திணிக்கப்பட்டிருந்த நிலையில் சீன பிரஜைகளால் இலங்கை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
இந்நிலையில் தனது மனைவியை கொலை செய்து எரிவாயு மற்றும் பெட்ரோலிய ஆய்வு பயன்படுத்தப்படும் ஒரு குழாய் சடலத்தை திணித்து வைத்ததாக அமெரிக்கர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த அமெரிக்கர் பணிபுரியும் எரிவாயு, பெற்றோலிய குழாய் நிறுவனத்தில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு சவுதி நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாலு படத்தை அடுத்து சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் படம், வேட்டை மன்னன். இதில் ஜெய்,தீக்ஷா சேத், விடிவி கணேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் இந்தப் படத்தை நெல்சன் இயக்குகிறார். ஹாலிவுட் படங்களை போன்ற ஆக்ஷன் காட்சிகளை கொண்ட இதன் ஷூட்டிங் சென்னையில் நடந்தது. இதையடுத்து படத்தின் 50 சதவிகித காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது.
இதற்காக லொகேஷன் பார்க்க, இயக்குனர் நெல்சன் உட்பட படக்குழுவினர் ஜப்பான் சென்றுள்ளனர். ‘இது ஸ்டைலான ஆக்ஷன் படம். அடுத்த மாதம் ஜப்பானில் ஷூட்டிங் நடக்கிறது. தொடர்ந்து 40 நாட்கள் அங்கு ஷூட்டிங் நடக்கும். உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்குப் பிறகு ஜப்பானில் அதிக நாட்கள் ஷூட்டிங் நடக்கும் படம் இதுதான் என்று படக்குழு தெரிவித்தது.
பாகற்காய் வளரும் பகுதியின் தன்மைக்கேற்ப கரும்பச்சை நிறமாகவோ அல்லது இளம்பச்சை நிறமாகவோ இருக்கும்.
இதன் சுவை கசப்பாக இருந்தாலும் இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.
பாகற்காயில் வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன.
சுவாசக் கோளாறுகள்
பசுமையான பாகற்காய்கள், ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகின்றன.
கல்லீரலை வலுப்படுத்துதல்
தினந்தோறும் ஒரு டம்ளர் பாகற்காய் சாற்றினை அருந்தினால், ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் இதன் பலனைக் காணலாம்.
நோயெதிர்ப்புச் சக்தி
பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி கூடும்.
பருக்கள்
பாகற்காயை உண்டு வந்தால் சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும். பாகற்காயை சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் 6 மாதம் அருந்தி வந்தால் கண்கூடாகப் பலனைக் காணலாம்.
நீரிழிவு நோய்
டைப் 2 நீரிழிவு நோயை(Type 2 diabetes) எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை
ஆரோக்கியமான சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பேணுவதற்கு பாகற்காய் மிகவும் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது.
இதய நோய்
பாகற்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீக்கப்பட்டு, இதய நோய் எளிதில் வருவதைத் தடுக்கிறது.
புற்றுநோய்
புற்றுநோய் செல்கள் பல்கிப் பெருகுவதை பாகற்காய் தடுக்கிறது.
எடை குறைதல்
உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பாகற்காயில் நிறைந்துள்ளன.
உடலின் செரிமான மண்டலத்தை நன்றாகத் தூண்டி நல்ல செரிமானத்தை உண்டாக்குகிறது. இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு வேகமாக உடல் எடையை குறைக்கிறது.
உலகில் அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. கடந்த ஆண்டில் (ஜூன் 2012–ஜூன் 2013) வீரர்களுக்கு போட்டி மூலம் கிடைத்த சம்பளம், போனஸ், பரிசு தொகை, விளம்பரம் மூலம் கிடைத்த வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி 180 கோடி சம்பாதித்து உலக அளவில் 16வது இடத்தை பிடித்துள்ளார். டென்னிஸ் வீரர் ரபெல் நடால் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முன்னேறி உள்ளார்.
டோனி கடந்த ஆண்டின் பட்டியலில் 31வது இடத்தில் இருந்தார். தற்போது 15 இடங்கள் முன்னேறி இருக்கிறார். அந்த அளவுக்கு அவர் சம்பாதிப்பை அதிகப்படுத்தி இருக்கிறார்.
இந்த பட்டியலில் மற்ற ஒரே இந்தியரான டெண்டுல்கரும் இடம் பெற்று உள்ளார். அவர் 31வது இடத்தில் உள்ளார். டெண்டுல்கர் 125 கோடி சம்பாதித்து உள்ளார்.
கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் 445 கோடி (அமெரிக்கா) சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளார். டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 408கோடி சம்பாதித்து 2வது இடத்திலும், கூடைப்பந்து வீரர் கோபே பிரையன்ட் 353 கோடி சம்பாதித்து 3வது இடத்திலும் உள்ளனர்.
பார்முலா 1 கார்பந்தய வீரர் பெர்னாண்டோ அலோன்சா (ஸ்பெயின்) 19வது இடத்திலும், மற்றொரு வீரர் லீவிஸ் ஹேமில்டன் (இங்கிலாந்து) 26வது இடத்திலும், டென்னிஸ் வீரர் ஜோகோவிச் (செர்பியா) 28வது இடத்திலும், ரபெல் நடால் (ஸ்பெயின்) 30வது இடத்திலும், தடகள வீரர் உசேன் போல்ட் 40வது இடத்திலும் உள்ளனர்.
அதிக பணம் சம்பாதித்த வீராங்கனைகளில் மரியா ஷரபோவா (ரஷியா) 9வது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளார். டென்னிஸ் வீராங்கனையான அவர் 165 கோடி சம்பாதித்து உள்ளார். செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 117 கோடி சம்பாதித்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளார்.
உலகில் எத்தனையோ சாதனையாளர்கள் குறித்து செய்திகள் வந்திருக்கக்கூடும். அனால் நீளத் தலைமுடி குறித்த சாதனையாளர் இந்தப் பெண் ஒருவராகத்தான் இருக்கமுடியும். இவரது சாதனையை முறியடிக்க வேறு எவரேனும் வருவார்களா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம் ஆகும்.
ஜோர்ஜியா நாட்டின் அட்லாண்டா நகரில் தனது மகனுடனும், இரண்டாவது கணவருடனும் வசித்து வருபவர் ஆஷா மண்டேலா ஆவார். 50 வயதாகும் இவர் கடந்த 25 வருடங்களாகத் தனது முடியைக் கத்தரித்துவிடாமல் கவனமுடன் பாதுகாத்து வருகின்றார்.
கடந்த 2008ம் ஆண்டில் நீளமான கூந்தலுக்கான முதல் பெண்ணாக இவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார். அடுத்த வருடம் இவரது ஒரு முடிக்கற்றையின் நீளம் 19 அடி 6 அங்குலமாக இருந்தது.
இதனால் இவரே இவரது சாதனையை முறியடித்தவராக அறியப்பட்டார். அதற்கு அடுத்த வருடம் இதுபோல் பின்னப்பட்டிருக்கும் முடிக்கற்றைகள் மிக நீளமாக வளரும் தன்மை கொண்டிருப்பதால் கின்னஸ் புத்தகமே அந்த சாதனையைக் குறிப்பிடுவதை நிறுத்திவிட்டது.
சிறுசிறு பின்னல்களாக தனது முடியினை அலங்கரித்துக் கொள்ளும் ஆஷா வெளியில் செல்லும்போது குழந்தைகளை சுமந்து செல்லுவது போன்ற குறுக்குத் துணியினைத் தோளில் கட்டிக்கொண்டு அதில் தனது முடியை சுருளாக்கி வைத்துக் கொள்கின்றார்.
சென்ற வாரம் அளந்தபோது இவரது முடிக்கற்றையின் நீளம் 55 அடி 7 அங்குலமாக இருந்துள்ளது. 39 பவுண்ட் எடை கொண்ட இவரது முடி இவருக்கு ஏராளமான இரசிகைகளைப் பெற்றுத்தந்துள்ளது. இவரது முடி ஒன்பதாவது உலக அதிசயம் என்றும் இவரை நடமாடும் சரித்திரம் என்றும் இவரது இரசிகைகள் அழைக்கின்றனர்.
இரண்டு முறை மாரடைப்பு வந்தபோதும் புற்று நோயினால் தாக்கப்பட்டு மருத்துவம் செய்துகொண்ட போதும் இவரது முடி கொட்டவில்லை.
மருத்துவர்கள் இத்தனை நீளமான முடி சுகாதரத்திற்குக் கெடுதல் என்று கூறியுள்ள போதிலும் இதனைக் கத்தரிப்பதில் ஆஷாவிற்கு விருப்பமில்லை.
லிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் ரவீந்தர் சந்திரசேகர். ஐ.நா தலைமை அலுவலகத்தில் செய்தி தொடர்புத்துறை சிறப்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார். தமிழ் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.
முதலில் நளனும் நந்தினியும் என்ற படத்தை தயாரிக்க ஆரம்பித்தார். தற்போது சுட்ட கதை படத்தை தயாரித்து வருகிறார். இதுதவிர ஒண் பிளஸ் ஒண் த்ரீ என்ற படத்தையும் கொலை நோக்கு பார்வை என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.
பாலாஜி, வெங்கி, லட்சுமி ரியா நடிக்கும் சுட்டகதை அடுத்த மாதம் வெளிவருகிறது. சுபு இயக்கி உள்ளார். இந்த படத்தின் வருமானத்தைக் கொண்டு இருதயம் பாதிக்கப்பட்ட 10 குழந்தைகளின் மருத்துவ செலவை ஏற்றுக் கொள்ள தயாரிப்பாளர் முடிவு செய்திருக்கிறார்.
சென்னை சவீதா பொறியியல் கல்லூரியும், பாரதிராஜா மருத்துவமனையும் இணைந்து நடத்திய இருதய பாதிப்பு குழந்தைகளின் மருத்துவ பரிசோதனை முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழந்தைகள் இந்த பலனை பெற இருக்கிறார்கள்.
உயிருக்கு போராடும் இந்த குழந்தைகளுக்காகவாவது படம் ஓட வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
சிறுவன் ஒருவன் விளையாடும் போது தவறுதலாக முட்டுக்கால் பகுதிக்குள் சென்ற நத்தையை தற்போது வெளியே எடுத்து மீன் தொட்டியில் வளர்த்து வருகின்றனர். விளையாடும் போது சிறுவர்களுக்கு அடிபடுவது இயல்பு தான். அப்படி அடிபடும் வேளைகளில் உடலில் வீக்கம் ஏற்படுவதுண்டு.
சில சமயங்களில் அத்தகைய வீக்கங்களில் சில முள் போன்றவைக் கிடைப்பதுண்டு. ஆனால், அமெரிக்கச் சிறுவனின் கால் வீக்கத்தில் இருந்து வெளிவந்த சிறிய நத்தையைக் கண்டு அனைவரும் அதிர்ந்து விட்டனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின், ஆரஞ்ச் கவுன்டி பகுதியில் வாழ்ந்து வருபவர் ராச்சல். இவரது 4 வயது மகன் போல் பிராங்ளின்.
கடந்த மாதம் பிராங்க்ளின் வீட்டருகே உள்ள புல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த அச்சிறுவனுக்கு முட்டியில் காயம் உண்டானது.
சிறிய காயம் தானே என அவனது பெற்றோர்கள் அசட்டையாக இருந்து விட மூன்று வாரத்துக்கு பிறகு, சிறுவனின் மூட்டுகளில் வீக்கம் உண்டானது. தொடர்ந்து அந்த வீகம் சீழ் பிடித்து புண்ணாக மாறியது.
வீட்டிலேயே முதலுதவி செய்ய நினைத்த சிறுவனின் பெற்றோர், வீக்கத்தை அழுத்தி சீலை வெளியேற்றினர். அப்போது, கல் போன்று ஒன்று வெளியேறியது. தானாக நகர்ந்த அந்தக் கல்லை உற்று நோக்கிய போது தான் அது கடல் நத்தை என்பது தெரியவந்தது.
அதிர்ந்து போன அவர்கள், பின்னர் அந்த குட்டி நத்தையை பிடித்து கழுவி தற்போது மீன் தொட்டியில் வளர்த்து வருகின்றனராம். பிராங்ளின் கீழே விழுந்த போது புல்வெளியில் கிடந்த நத்தையின் முட்டை சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்தின் வழியாக உள் சென்று வளர்ந்து நத்தையாக வெளியேறியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
வவுனியா நகரசபையின் தலைவர் கனகையா வட மாகாணசபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக்குழு – 6ற்கு தனது பூரண ஆதரவினைத் தெரிவிப்பதாக இன்றையதினம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
சுயேட்சைக்குழு-6 ஐச் சேர்ந்த எழில்வேந்தனின் வவுனியா வேப்பங்குளம் அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்தே கனகையா இந்த ஆதரவு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
கனகையா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வவுனியா நகரசபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு தற்போது வவுனியா நகரசபையின் தலைவராக இயங்கி வருகின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த ஐந்து வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு புரிய முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நாமக்கல் மாவட்டம், பரமத்தி, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் கண்ணன்(40). அவருக்கு, ஐந்து வயதில், ஒரு பெண் குழந்தை உள்ளது. அவரது மனைவி சுமதி, குடும்பத்தகராறு காரணமாக, மூன்று மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.
கண்ணன், தினந்தோறும் வேலைக்குச் செல்வதால் தன் மகளை அருகில் உள்ள தன் தாயார் மீனாள் பாதுகாப்பில் விட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த நாராயணன் மகன் ராஜா 30 என்பவர், குடிபோதையில் மீனாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள முட்புதருக்குச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது ராஜா தப்பியோட முயன்றார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் ராஜாவை பிடித்து நையப்புடைத்தனர்.
பின்னர், அவ்வழியாக ரோந்து சென்ற டி.எஸ்.பி. உதயகுமாரிடம், ராஜாவை ஒப்படைத்தனர். பரமத்தி பொலிஸார் வழக்கு பதிந்து, ராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
இணைய பக்கங்களை பார்வையிட நாம் அதிகம் பயன்படுத்தக் கூடிய ப்ரெளசரான மோசில்லா ஃபயர்பொக்ஸ் இனி தமிழிலேயே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கணிணி பயன்பாடும் இணைய பயன்பாடும் அதிகரிக்க அதிகரிக்க மென்பொருட்களின் கட்டளை சொற்களை தமிழுக்கு மாற்றும் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்றன. இருப்பினும் அது வெற்றிகரமானதாக வலம் வந்துவிடவில்லை.
தற்போது 10 பொறியாளர்களைக் கொண்ட குழுவினர் மோசில்லா ஃபயர் பொக்ஸ் ப்ரெளசரின் கட்டளை சொற்களை தமிழுக்கு மாற்றும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதில் file என்பதற்கு கோப்பு, preferences என்பதற்கு விருப்பங்கள் என்றும் copy என்பதற்கு நகல் எடு என்றும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மோசில்லா ஃபயர் பொக்ஸ் 120 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதில் சில இந்திய மொழிகளும் அடங்கும். இந்த தமிழாக்கம் செய்யப்பட்ட மோசில்லா ஃபயர்பொக்ஸ் அடுத்த 3 அல்லது 4 வாரங்களில் வெளியிடப்பட இருக்கிறது.
தமிழரை மோசமாக சித்தரிக்கும் மெட்ராஸ் கபே படத்தை மும்பையிலும் திரையிடக் கூடாது என்று பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாகவும் தமிழரை மோசமானவர்களாகவும் சித்தரிக்கும் மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று தமிழக கட்சிகளை சேர்ந்த சீமான், வைகோ உள்ளிட்டோர் தடை கோரியுள்ளனர்.
இந்தப் படம் வெளியாகும் அரங்குகளை முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விஷயத்தில் தன் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தவறாக சித்தரித்து காட்டப்பட்டுள்ள மெட்ராஸ் கபே திரைப்படத்தை மும்பையில் வெளியிட மும்பை பாராதீய ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மும்பை பாரதீய ஜனதா தலைவர் அஷிஷ் ஷெலார் கூறுகையில், ஜோன் ஆபிரகாம் கதாநாயகனாக நடித்துள்ள மெட்ராஸ் கபே திரைப்படத்தில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை தீவிரவாதியாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை இந்த படம் காட்டுகிறது. மேலும் தீவிரவாத செயல்களுக்கு தமிழ் அமைப்புகள் உதவியதாக காட்டப்படுகிறது. இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தடை கோரி தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன.
நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் ஏராளமான தமிழ் சகோதரர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நிறைய அமைப்பினர் எங்களிடம் இந்த திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து விளக்கியுள்ளனர்.
எனவே மெட்ராஸ் கபே திரைப்படம் மும்பையில் திரையிடப்படுமானால் சமுதாயத்தில் முரண்பாட்டை உருவாக்கும் என்று அறியப்படுகிறது. மாநில அரசு இப்படம் திரையிடுவதை தடுக்காவிட்டால் தியேட்டர்களில் பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்துவார்கள் என்று குற்றிப்பிட்டுள்ளார்.
தனது மகள் தாமினி தன்னுடன் திரும்பி வந்த சந்தோஷத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி நன்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் சேரன். நீதிமன்றத்திற்கு வந்த தாமினி, தந்தையுடன் செல்வதாக கூறினார்.
இதுகுறித்து சேரன் கூறுகையில் என் பொக்கிஷம் திரும்பக் கிடைத்துவிட்டது. எனக்கு பக்கத் துணையாக நின்றது மீடியாவும் நண்பர்களும்தான். இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் என் நன்றியைத் தெரிவிக்கிறேன் என்று கூறி தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
சேரனின் இந்த செய்கை வந்திருந்த அனைவரையும் நெகிழ வைத்துவிட்டது. இதற்கு முன்னதாக பேஸ்புக்கில் சேரன், இன்று என் பொக்கிஷம் திரும்பி வரும் நாள். அவள் இந்த உலகிற்கு வந்த நாளில் எவ்வளவு பயமும் பதட்டமும் இருந்ததோ அதைவிட 100 மடங்கு இன்று.
இன்று நான் காணப்போகும் வெற்றி எனக்கானது மட்டும் அல்ல இவ்வுலகில் உள்ள அனைத்து பெற்றோர்களுக்குமானது” என்று எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டில் பெண் ஒருவர் 44 வருடங்களுக்கு முன்பு பிரிந்துபோன தன்னுடைய சகோதரிகளை பேஸ்புக்கின் உதவியால் கண்டுபிடித்துள்ளார்.
பிரான்சில் உள்ள துவைய்(Douai) என்னும் இடத்தில் வசிப்பவர் முரியேல் வண்டர்வேக்கன்(Muriel Vanderveken) (66). இவருக்கு லிலியான்(Liliane), டோர்த்தி( Dorothée) என்ற இரு சகோதரிகள் உள்ளனர்.
சிறு வயதில் தன்னுடைய குடும்பத்தை விட்டு கான்வென்ட் பள்ளிக்கு சென்றுவிட்ட இவரால் பின்பு தன்னுடைய குடும்பத்தினரை சந்திக்க முடியவில்லை. பல ஆண்டுகளுக்கு பின்பு தன்னுடைய குடும்பத்தினரை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவை தோல்வியிலேயே முடிந்துள்ளன.
இந்நிலையில் 66 வயதான வண்டர் வேக்கன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். எனவே தான் இறப்பதற்குள் தன்னுடைய சகோதரிகளை சந்தித்து விட வேண்டும் என்று நினைத்த இவர் பேஸ்புக்கின் மூலம் தனது சகோதரிகளை தேட ஆரம்பித்துள்ளார்.
அப்போது இவருடைய சகோதரிகளில் ஒருவரான டோர்த்தி என்பவரை கண்டுபிடித்துள்ளார். இது குறித்து முரிலி கூறுகையில், நான் பேஸ்புக்கில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். ஆனால் அவற்றில் நம்மைப் பற்றி விடயங்களை கொடுப்பதன் மூலம் என்னுடைய தங்கையை கண்டுபிடிக்க முடிந்தது.
மேலும், என்னுடைய மற்றொரு தங்கை மற்றும் அண்ணனை தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது எனக்கு வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்.
சிரியாவில் அதிபர் ஆசாத் அரசுக்கு எதிராக போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நடந்துவரும் உள்நாட்டு போரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்க அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே போராளிகள் வசமிருந்த பகுதிகளில் நேற்று அரசுப்படையினர் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த இரசாயனக் குண்டுகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 1300 பேர் கொல்லப்பட்டதாக போராளிகள்
தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்த வீடியோ ஆதாரங்களையும் போராளிகள் வெளியிட்டுள்ளனர். இதில் மூச்சுத்திணறி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள், பெரியவர்கள் என பொதுமக்கள் மருத்துவமனைகளில் நிரம்பியிருக்கும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.
மேலும் இதுபோன்று பல இடங்களில் நடத்தப்பட்ட இரசாயனக்குண்டு தாக்குதலுக்கு பொதுமக்கள் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை போராளிகள் வெளியிட்டுள்ளனர். இருந்தும் இதுகுறித்து உண்மை நிலை என்ன என்று இன்னும் ஊர்சிதப்படுத்தப்படவில்லை. சிரியா ஆட்சியாளர்கள் இதனை மறுத்துள்ளனர்.
ஐ.நா. இரசாயன ஆயுதக்குழுவினரின் விசாரணை நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சி என்று சிரியா செய்தி நிறுவனம் சானா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து உண்மை நிலையை கண்டறிய உடனடியாக சம்பவப் பகுதிகளுக்கு ஐ.நா. குழுவிர் விரைய அரபு லீக் வலியுறுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் மொண்டி பனேசர் தொடர்ந்தும் இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியும் என அணித் தலைவர் அலிஸ்டெயார் குக் தெரிவித்துள்ளார்.
திறமை வாய்ந்த பந்துவீச்சாளரான மொண்டி பனேசர் தமது அணிக்கு தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பருவகாலத்துடன் சசெக்ஸ் பிராந்திய அணியில் இருந்து பனேசர் விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் மதுபானசாலையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றிற்காக அவருக்கு பொலிஸார் அபராதம் விதித்திருந்தனர். இந்தச் சம்பவம் குறித்து 31 வயதான மொண்டி பனேசர் கழகத்தின் உள்ளக விசாரணையை எதிர்நோக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
47 வயதான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம் தனது 30 வயதான அவுஸ்திரேலிய காதலி தொம்சன் ஷனீராவை மணந்ததாக நேற்று அறிவித்தார்.
லாகூரில் கடந்த 12ம் திகதி எளிமையாக நடந்த விழாவில் நான் ஷனீராவை திருமணம் செய்துகொண்டேன். இது எனக்கு, எனது மனைவி, மகன்களுக்கும் ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் மக்கள் தொடர்பு ஆலோசகரான காதலி ஷனீராவிடம் வசிம் அக்ரம் திருமணம் செய்துகொள்வது குறித்து கடந்த மாதம் பேசினார். இதனையடுத்து இருவீட்டர் சம்மதத்துடன் சென்ற அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
அவரது முதல் மனைவி ஹூமா நோய்வாய் பட்டநிலையில் 2009ம் ஆண்டு சென்னையில் இறந்தார். உடல் நிலை சரியில்லாத தனது தந்தையின் விருப்பத்திற்கு ஏற்பவும், திருமணம் செய்து கொள்ளாமல் இருவர் சேர்ந்து வாழ்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்று மதபோதகர் கூறியதை அடுத்தும் இந்த திருமணம் நடந்தது என்று கூறப்படுகிறது.