எம்மை வாழ விடுங்கள்: 17 இலங்கை அகதிகள் கைது..!

அவுஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற இலங்கை அகதிகள் பெண்கள், குழந்தைகள் உள்பட 17 பேரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயன்ற முகவர்கள் உள்பட 2 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த ஊத்துக்காட்டில் சந்தேகப்படும்படியான சிலர் கடந்த 2 நாள்களாக தங்கி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து வாலாஜாபாத் பொலிஸார் திங்கள்கிழமை இரவு ஊத்துக்காடு சென்று விசாரித்தனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் மதுரை ஆணையூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த அண்ணாமலை மகன் சுகந்தகுமார் (33), அவரது மனைவி மேரி சுலோசனா (27), திருநெல்வேலி கோபாலசமுத்திரம் சுப்பிரமணியபுர அகதிகள் முகாமைச் சேர்ந்த ராமசாமி மகன் கர்ணன் (31), அவரது மனைவி சந்திரிகா (29), அவர்களது மகன் சந்தோஷ்குமார் (10), மகள் ரஞ்சன்தேவி (6), சுந்தரலிங்கம் மகன் விமலநாதன் (36), அவரது மனைவி விஜயேந்திரி (33), அவர்களது மகன் சுடர்மணி (7), சந்தியா பிள்ளை மகன் அந்தோனி பிள்ளை (38), தவராஜா மகன் பி.ஏ. பட்டதாரி கரண் (21), குருசாமி மகன் பேச்சிமுத்து (20), மாரிமுத்து மகன் சிவா (27), பொன்னையா மகன் கேதீஸ்வரன் (30), திசநாயகா மகன் ரமேஷ் (38) மற்றும் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமைச் சேர்ந்த அந்தோனி மகன் சுரேஷ் (41), அவரது மகன் அந்தோனி சார்லஸ் (16) ஆகிய 17 பேர் இருப்பது தெரியவந்தது.

அவர்கள் சென்னை அல்லது கடலூரில் இருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல இருந்தது தெரியவந்தது.

ஊத்துக்காட்டைச் சேர்ந்த மீனவர் ஜோதிராஜ் (50) முகவராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இவருக்கு உதவியாக அதே ஊரைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி பிரகாசம் (35) செயல்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த பொலிஸார் காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள பொலிஸ் சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 6 பேர் தவிர மற்ற அகதிகள் மற்றும் முகவர்கள் ஜோதிராஜ், அவருக்கு உதவியாக இருந்த சாரதி பிரகாசம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் அவர்களை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார் சிறையில் அடைத்தனர்.

இதேவேளை, புதிய வாழ்க்கைத் தேடிச் செல்லும் எங்களை அரசே முன்வந்து அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பிடிபட்ட இலங்கை அகதிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அவுஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற அகதிகள் கூறியது:

நாங்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை. சொந்த நாட்டில் வாழ வழியின்றிதான் இந்தியாவுக்கு வந்தோம். ஆனால் இங்கு எங்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

குறைந்த கூலிக்கு நீண்ட தூரம் பயணம் செய்து செல்ல வேண்டியுள்ளது. ஆனால் மாலை 6 மணிக்குள் முகாமுக்குள் வரவில்லை என்றால், எங்களை தரக்குறைவான வார்த்தைகளில் பேசுகின்றனர். படித்த பட்டதாரிகளுக்கும் நல்ல வேலைவாய்ப்பு இல்லை. படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி அதே கூலி வேலைக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இன்றைய தலைமுறை குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் நாங்கள் வாங்கும் கூலிக்கு குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

எங்கள் உறவினர்கள் பலர் அவுஸ்திரேலியாவில் உள்ளனர். அவர்கள் அவ்வப்போது எங்களைத் தொடர்பு கொண்டு பேசுவர். அங்கு வசதியுடன், சுதந்திரமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

6 மாதம் தங்கிவிட்டால் அவுஸ்திரேலியா நாட்டு குடியிரிமை கிடைத்துவிடுகிறது. இந்தியாவில் இருந்து வரும் இலங்கை அகதிகளை அவுஸ்திரேலிய அரசு திருப்பி அனுப்புவதில்லை.

கடந்த 2 தலைமுறையாக வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோம். இப்போது ஒரு வாழ்க்கையைத் தேடிச் செல்ல நினைக்கிறோம். எனவே அரசு எங்களை அவுஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப உதவி செய்ய வேண்டும் என்று கண் கலங்கியவாறு தெரிவித்தனர்.

இந்தியா இலங்கையுடன் இறுதிப் போட்டியில்..!

cricket

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்றைய தினம் இடம்பெற்ற இறுதி லீக் போட்டியில்81 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இந்தியா, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையேயான,முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடந்து வருகிறது.

இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று இரவு நடந்தது. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.

இந்தியா அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்துனேயே நேற்றையதினம் களமிறங்கியிருந்தது.

இந்தப் போட்டியில் முதலில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை,இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

தவான் 15 ஓட்டங்களுடனும், கோலி31 ஓட்டங்களுடனும், தினேஷ் கார்த்திக் 12ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இந்திய அணி 29 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 119 ஓட்டங்களை எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் பாதிக்கப்பட்டது. அப்போது, சர்மா 48ஓட்டங்களுடனும், ரெய்னா4 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, இலங்கைக்கு 26 ஓவர்களுக்கு 178 ஓட்டங்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து, இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய தரங்கா 6ஓட்டங்களுடனும், ஜெயவர்த்தன 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த சங்கக்கார (0), சந்திமால் (26), மெத்யூஸ்(10) உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடனேயே மைதானத்தை விட்டு வெளியேற,இலங்கை அணி 24.4 ஓவர்களில் 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா,ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதன்படி நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தப் போட்டிகளில் ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேற்கிந்திய தீவுகள் அணி சொந்த மண்ணிலேயே தோல்வியைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை முதலில் பந்துவீச்சு..!

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையே நடைபெறும் இறுதி லீக் போட்டிக்கான நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணியின் தலைவர், இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளார்.

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு நுழைய இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. அபாரமான முறையில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா பெறும்.

ஏற்கனவே, இலங்கை, மேற்கிந்தி தீவு அணிகள் தலா 9 புள்ளிகளுடன் உள்ளது. ஓட்ட விகிதாசாரத்தில் இலங்கை அணியே (+1.019) முன்னணி வகிக்கிறது.

தற்போது இந்திய அணி 5 புள்ளிகளுடன் உள்ளது. இன்றைய போட்டியை இந்திய அணி வென்றால் 3 அணிகளும் சமபுள்ளிகளுடன் இருக்கும். இதனால் ஓட்ட விகிதாசார அடிப்படையில் முதல் 2 இடத்தை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாகாணத்தில் முதலில் சிவில் நிர்வாகமே தேவை..!

வடக்கு மாகாண சபைத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகச் சர்வதேசத்தால் அவதானிக்கப்படுகிறது. இந்த நிலையில் வடக்கில் முதலில்,சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கோரிக்கை விடுத்தார். கொழும்பு இராஜகிரியவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: வடக்கு மாகாண சபை உட்பட மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்தப்படுவதற்கான உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும். ஆனால் தற்போதே தேர்தலுக்கு முன்னோடியாக அரசு தானம் வழங்க ஆரம்பித்து விட்டது.

குறிப்பாக மூக்குக் கண்ணாடி மற்றும் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் போன்றவற்றைத் தேர்தல் நடைபெறவுள்ள மாகாணங்களில், அரசு தானமாக வழங்குகின்றது. அத்துடன் அரச சொத்துக்களும் பயன்படுத்தப்படுகின்றன என்றார்.

பேஸ்புக் பேஜின் லைக் எண்ணிக்கையை கணக்கிட புதிய சாதனம்..

facebook

குறுகிய காலத்தில் பிரபலமாக பில்லியன் கணக்கான பயனர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன.

அவற்றில் ஒன்றுதான் விரும்பிய பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி லட்சக்கணக்கானவர்களின் விருப்பத்தை (Like) பெறுவது. இவ்வாறு பெறப்படும் லைக் எண்ணிக்கையினை பேஸ்புக் தளத்தினை பயன்படுத்துபவர்களால் மட்டுமே பார்வையிட முடியும்.

ஆனால் பல வியாபார நிறுவனங்களும் தனது வியாபார உத்திகளில் ஒன்றாக இந்த பேஸ்புக் லைக்கினை பயன்படுத்தி வருகின்றது.இவ்வாறானர்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக் லைக்கின் எண்ணிக்கையினை எடுத்துக்காட்டுவதற்கு Fliike எனும் கணக்கீட்டு சாதனம் (Fliike physical Facebook fan counter) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சாதனம் லைக் அளவுகளில் ஏற்படும் அதிகரிப்பு மற்றும் வீழ்ச்சிகளை நேரடியாக உடனுக்குடன காட்டிக்கொண்டு இருக்கும்.இதன் விலை 390 அமெரிக்க டொலர்கள் மட்டுமே.

 

அவுஸ்திரேலிய பெண்ணை காதலித்து மறுமணம் செய்கிறார் வசிம் அக்ரம்!!

vasim akram
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் வசிம் அக்ரம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷனாரியா தொம்சனை மறுமணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் 47 வயதான வசிம் அக்ரம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷனாரியா தொம்சன் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் நடந்தது. இதை தொம்சனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த ஆண்டு இறுதியில் திருமணம் இடம்பெறவுள்ளது.

வசிம் அக்ரம் ஷனாரியா தொம்சனை 2011 ஆம் ஆண்டு மெல்போர்னில் முதல் முறையாக சந்தித்தார். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. ஷனாரியா தொம்சன் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார். திருமணத்துக்கு பிறகு அவர் பாகிஸ்தானில் குடியேறுகிறார்.

இந்நிலையில் இது குறித்து வசிம் அக்ரம் தெரிவிக்கையில்

நான் மீண்டும் திருமணம் செய்வேன் என்று நினைத்து பார்க்கவில்லை. நான் அதிர்ஷ்டக்காரன் தான் மீண்டும் காதல் உருவானது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். மனைவியை இழந்த பிறகு வசிம் அக்ரம் நடிகை சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருந்தார். அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. இதை இருவரும் மறுத்து இருந்தனர்.

வசிம் அக்ரமின் மனைவி ஹுமா கடந்த 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வசிம் அக்ரமுக்கு முதல் மனைவி ஹுமா மூலம் 15 வயதில் தைடூர் என்ற மகளும், 12 வயதில் அக்பர் என்ற மகனும் உள்ளனர். இருவரும் கராச்சியில் வசிக்கின்றனர்.

சிறந்த வேகப்பந்து வீச்சாளரான வசிம் டெஸ்டி போட்டிகளில் 414 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார்.

 

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற 17 தமிழர்கள் பிடிபட்டனர்..

kanchipuram

இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 17 பேர் காஞ்சிபுர காவல்துறையினரிடம் பிடிபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் ஏராளமானோர் தமிழகத்திற்கு சென்று அங்கு அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் பலர் இலங்கைக்கோ, உறவினர்கள் உள்ள அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கோ அடிக்கடி தப்பிச் செல்வதும் காவல்துறை அவர்களை பிடிப்பதும் தொடர்ந்து தமிழகத்தில் நடந்து வரும் சம்பவங்கள்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம், ஊத்துக்காடு பகுதியிலிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 11 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உள்ளிட்ட 17 பேரை காவல்துறை பிடித்துள்ளது.பிடிபட்டவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமணமண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

விசாரணையில் அவர்கள், திருநெல்வேலி மாவட்டம் சுப்பிரமணியபுரம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி மற்றும் மதுரை மாவட்டம் ஆணையூர் திறந்தவெளி முகாம்களை சேர்ந்தவர்கள் எனவும், வாலாஜாபாத்தை சேர்ந்த ஜோதிராஜா என்ற ஏஜெண்ட் மூலம் இவர்கள் இலங்கைக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

பிடிபட்ட இலங்கை தமிழர்களை அந்தந்த முகாம்களில் திரும்ப கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

 

மீண்டும் இணையும் ஷங்கர் – விஜய்..!

கொலிவுட்டில் விஜய் மற்றும் ஷங்கர் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் நண்பன். இதில் விஜய்யுடன் இணைந்து ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். நண்பன் படம் இந்தியில் வெளியாகி வசூல் சாதனை புரிந்த 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் தான்.

சொந்தக் கதைகளை இயக்கி வந்த ஷங்கர் முதன் முறையாக இந்தி படமான 3 இடியட்ஸை தமிழில் ரீமேக் செய்தார்.

தற்போது அறிமுக இயக்குனர் நேசன் இயக்கத்தில் ஜில்லா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய், மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

அதன் பின்பு மீண்டும் ஷங்கர் கூட்டணியில் புதிய படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெகா பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் இப்படத்திற்கு விஜய், இயக்குனர் ஷங்கருக்கு மொத்த கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஷங்கர் ஐ படத்தை முடித்த பின்பு விஜய் படத்தை இயக்குவதாகவும், அதுமட்டுமின்றி விஜய், 2014ம் ஆண்டில் முருகதாஸ், ஷங்கர் படத்தை தவிர வேறு யாருக்கும் கால்ஷீட் கொடுக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா – இலங்கை – மாலைத்தீவுகள் இடையே கடல் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து..!

meeting

இந்தியா, இலங்கை, மாலைத்தீவுகள் இடையில் கடல் போக்குவரத்து பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.

இலங்கை வந்துள்ள இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், இலங்கையின் பாதுகாப்புத்துறைச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, மாலைத்தீவுகள் பாதுகாப்பு அமைச்சர் முகமது நாஜிம் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளைச் செய்வது, கடற்கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, கடல் பகுதியை மாசுபடுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பது போன்ற விஷயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்த இம்மூன்று அண்டை நாடுகளும் உடன்பட்டுள்ளன.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்துவதன் முக்கியத்தை உணர்ந்து தங்களுக்குள் இந்த ஒப்பந்தத்தை இந்த மூன்று நாடுகளும் செய்துகொண்டுள்ளன.

(BBC)

‘நோ’ சொன்ன தனுஷ், ‘ஓ.கே.’ சொன்ன சிம்பு!

dhanush

பசங்க, மெரினா படங்களின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. பசங்க படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் பாண்டிராஜ். இந்தப் படம் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.

பின்னர்,மெரினா, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களை இயக்கி உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா சூப்பர் ஹிட்டானது.

அதைத் தொடர்ந்து தனுஷிடம் கால்ஷீட் கேட்டிருந்தார் பாண்டிராஜ். ஆனால், இந்தியில் தனுஷ் நடித்த “ராஞ்ஹெனா” சூப்பர் ஹிட்டாகி இருப்பதால், அடுத்தும் இந்திப் படத்தில் நடிக்கப் போகிறார் தனுஷ். அதனால் பாண்டிராஜுக்கு கால்ஷீட் இல்லையென்று சொல்லிவிட்டார்.

இதனால் கடுப்பான பாண்டிராஜ் தனுஷின் போட்டியாக சொல்லப்படும் சிம்புவைச் சந்தித்து கதை சொல்லி இருக்கிறார். அவர் சொன்ன கதையில் மகிழ்ந்த சிம்பு தான் நடிப்பதாக ஓ.கே. சொல்லிவிட்டாராம்.

சிம்புவே இந்தப் படத்தை தயாரிக்கப் போகிறாராம். சிம்புவின் தம்பி குறளரசன் இந்தப் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.

 

பிரபல இயக்குனர் புற்றுநோயால் காலமானார்!

vasu

மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்குமுத்தாக உள்ளிட்ட பல படங்களை இயக்கிய , பிரபல சினிமா இயக்குனர் ராசு மதுரவன் இன்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி சென்னை மருத்துவமனையில் வைத்து உயிரிழந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராசு மதுரவன், மறைந்த மணிவண்ணனிடம் பணியாற்றியவர். பூமகள் ஊர்வலம் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானார். குடும்பம், கிராமத்து உறவுகளை அருமையாகச் சித்தரித்த இவரின் மாயாண்டி குடும்பத்தார் படம் இவரை பிரபலப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து மதுரையையும், திண்டுக்கல் மாவட்டத்தையும் பின்னணியாகக் கொண்ட திரைப்படங்களையே ராசு மதுரவன் இயக்கினார். கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டி ஒலிபெருக்கி நிலையம் உள்ளிட்டவை இவரது இயக்கத்தில் உருவான வேறு சில வெற்றிப் படங்கள்.

சமீபத்தில், இவருக்கு நாக்கு மற்றும் தொண்டை பகுதியில் புற்றுநோய் பரவியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதன் தொடர்ச்சியாக, சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள காமாட்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 11 மணியளவில் ராசுமதுரவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தனியார் பஸ் உரிமையாளர்கள் பணி பகிஸ்கரிப்பு – நாளை முதல் பஸ்களும் சேவையில் இல்லை..!

நாளை நள்ளிரவிலிருந்து பணி பகிஸ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இது ஒருநாள் பகிஸ்கரிப்பா அல்லது தொடர்ந்து பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனரா என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை.

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பல கலந்துரையாடல்கள் மேற்கொண்ட போதும் இதுவரையில் எந்தவொரு தீர்வும் தமக்கு கிடைக்காமையை தொடர்ந்து இத்தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

பஸ் கட்டண அதிகரிப்பு குறித்து நேற்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போதும் அதில் கெமுனு விஜேரத்ன கலந்து கொள்ளவில்லை.

இளவரசன் கடைசியாக எழுதிய காதல் கடிதத்தை பார்த்து திவ்யா கண்ணீர்..!

இளவரசன் தனக்கு கடைசியாக எழுதிய காதல் கடிதத்தை பார்த்து திவ்யா கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றியதாக கூறப்படுகிறது.

´இளவரசன்–திவ்யா´ காதல் தமிழகத்தில் யாரும் மறக்க முடியாத சுவடுகளாக பதிவாகி விட்டது. கலப்பு திருமணம் செய்ததால் ஏற்பட்ட மோதல், வன்முறை என சினிமாவை போல் நீண்டு கொண்டே சென்ற இவர்களின் காதல் இளவரசனின் மரணத்தால் முடிவுக்கு வந்து விட்டது.

காதல் மனைவியை பிரிந்த துக்கத்தில் இருந்த இளவரசன் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இறந்து விட்டது பல காதல் ஜோடிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இறந்து கிடந்த இளவரசன் தனது மனைவி திவ்யா,பெற்றோருக்கு தனிதனியாக கடிதம் எழுதி உள்ளார். அதில் திவ்யாவை அவர் எந்த அளவுக்கு நேசித்து உள்ளார் என்று விவரித்து உள்ளார். இந்த கடிதம் இளவரசனின் பெற்றோரிடம் போலீசார் படிக்க கொடுத்தனர். இதே போல் அந்த கடிதத்தை போலீசார் திவ்யாவிடமும் படிக்க கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.

இளவரசனின் கடைசி காதல் கடிதம் பற்றி பத்திரிகை மற்றும் டி.விக்களில் செய்தி வெளியிடப்பட்டு வருவதை பார்த்த திவ்யா கண்ணீர் விட்டு கதறி அழுததாக கூறப்படுகிறது. தனக்காக தன் உயிரையும் விட்ட இளவரசனை நினைத்து திவ்யா மிகுந்த சோகத்தில் உள்ளார்.

அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி வருகிறார்கள். மேலும் ஐகோர்ட்டு உத்தரவுப்படி திவ்யாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதால் நெருங்கிய உறவினர்களை தவிர வேறு யாரையும் போலீசார் திவ்யாவின் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.

சோகமே உருவான நிலையில் திவ்யா உள்ளார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் நிற்கிறார் திவ்யா. காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய போது இருவரும் கைகோர்த்து நின்றனர். தற்போது இளவரசனின் மரணத்தால் திவ்யா மட்டும் தனிமையில் இருக்கிறார்.

காதலால் ஒரு புறம் தந்தையை இழந்தும், மறுபுறம் காதல் கணவரை இழந்தும், சமூகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை நினைத்தும் திவ்யாவின் மனநிலை குழப்பத்தில் உள்ளது. மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ள திவ்யாவுக்கு ஆறுதல் கூறுவது கூட கடினம் தான்.

தர்மபுரியில் ரெயில்வே தண்டவாளம் அருகே பிணமாகக்கிடந்த இளவசரன் உடல் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை வீடியோவும் எடுக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சியை இன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் தனபாலன், செல்வம் ஆகியோர் பார்வையிடுகின்றனர். அவர்களுடன் வீடியோ படத்தை பார்க்க இளவரசனின் பிணத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் தண்டர் சீப், சதீஷ்குமார், ரவிக்குமார் ஆகியோர் தர்மபுரியில் இருந்து சென்னை சென்று உள்ளனர். நீதிபதிகள் குழுவுடன் இந்த 3 டாக்டர்களில் ஒருவர் அந்த வீடியோ காட்சியை பார்வையிடுவார்.

இவர்களுடன் சேர்ந்து இளவரசன் பெற்றோர் சிபாரிசு செய்து உள்ள சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த டாக்டர் டெக்காலலும் வீடியோ காட்சியை பார்வையிடுகிறார். இவர் சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல ஆஸ்பத்திரிகளில் சட்டம் சார்ந்த மருத்துவத்துறையில் பணியாற்றி பல பிணங்களை பரிசோதனை செய்து அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளவரசன் திவ்யாவுக்கு எழுதிய கடிதம் வருமாறு…

என் அன்புக்காதலி திவ்யாவுக்கு,

நீ என்னுடன் இருந்த நாட்கள் என் வாழ்நாளில் மறக்கமுடியாது. நீ என்னை விட்டுப் பிரிந்த நாளில் இருந்து என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. காரணம், எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். ஜுலை 1 ம் திகதிவரை நீ வருவாய், என்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வாய் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

ஒருவேளை நீ அன்று என்னுடன் வரவில்லை என்றால் கண்டிப்பாக நான் இந்த உலகத்தில் இருக்க மாட்டேன்.

நீ ஏற்கனவே உன் அப்பா இறந்ததற்கு காரணம் நீ தான் என்று நினைத்து கஷ்டப்படுகிறாய். நீ அடிக்கடி என்னிடம் சொல்வாய் “என் அப்பா உண்மையாகவே என் மீது பாசம் வைத்தவராய் இருந்தால் என்மேல் கொலைப்பழியை போட்டுவிட்டு என் வாழ்க்கையை இப்படி செய்திருக்க மாட்டார்” என்று சொல்வாய்.

அதுபோலவே நீ என்னிடம் கேட்பாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உண்மையாகவே என்னால் உன்னை விட்டு வாழமுடியவில்லை.

ஏன் எனில் அந்த அளவிற்கு நாம் இரண்டு பேரும் இருந்தோம். எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் திவ்யா. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.

நான் உனக்கு என்ன துரோகம் செஞ்சேன் ? என்கூட ஏன் வாழ வரமாட்டேங்கறன்னு கண்டிப்பா எனக்குத் தெரியல …… நாம்ம இரண்டுபேரும் எவ்வளவு கஷ்டத்துக்கும் மேல ஒன்னு சேர்ந்தோம்னு உனக்கு நல்லா தெரியும்.

எனக்கு ரொம்ப ஆசை திவ்யா. நம்ம இரண்டு பேரும் நல்லா வாழனும். நம்மள கேவலமாப் பாத்தவங்க முன்னாடி பொறாமைப்படும் அளவுக்கு உன்ன அழகா, கண்கலங்காம வச்சுக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசை.

உனக்கு ஒன்னு தெரியுமா…நீ என்னோட எல்லா விசயத்துலையும் சேர்ந்திருக்க. ஆனா இப்போ எதிலும் எங்கூட இல்ல. ரொம்ப கஷ்டமா இருக்குடா.

Please திவ்யா என்ன வெறுக்காத எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.

தயவு செய்து என்னை மன்னித்துவிடு. நீ என்னிடம் கேட்கலாம், உண்மையாகவே நீ என் மேல் பாசம் வைத்தவனாக இருந்தால் ஏன் நீ என்னை விட்டு போகனும்னு….

..கண்டிப்பா சொல்றேன். நான் உன்ன விட்டுப் போகனும்னு நெனக்கல. எனக்கு உன்னோட சேர்ந்து வாழனும்னு ரொம்ப ஆசை. ஆனால், என்னால உன்னை பிரிந்து வாழ முடியல திவ்யா. என்னை மன்னிச்சுடு. நான் இந்த உலகத்தை விட்டுப் போறேன்.

இன்னொரு ஜென்மம் இருந்தா நீயும் நானும் ஒரே சாதியில பொறந்து பெத்தவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குடா திவ்யா.

I Love so much baby….I love so much….

என் பாசத்திற்குரிய அப்பாவிற்கு….

என்னை மன்னிச்சுடுங்க. அப்பா அம்மாவையும், பாலாஜி, அக்கா எல்லோரையும் பாத்துகோங்க. தயவு செஞ்சி அம்மாவை கஷ்டப்படுத்தாதீங்கப்பா.

என் நேசமிகு அம்மாவிற்கு அம்மா என்னை மன்னிச்சுடு. எனக்கு உன்னை நல்லா வெச்சி பார்க்கனும்னு ஆசை. நீயும் அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்க என்னை வளர்த்து படிக்க வைக்க, ஆனால் என்னால உங்களுக்கு எதுவுமே செய்ய முடியல……

…அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா நீயும், அப்பாவும் எனக்கு குழந்தையா பிறக்கனும். இந்த ஜென்மத்துல பட்ட கடனை நான் உங்களுக்கு அடுத்த ஜென்மம் தீர்க்கனும்.

என்னோட Best Friend என் அண்ணன் பாலாஜிக்கு….

என்னை மன்னிச்சிடு பாலா…

நீ எனக்கு எவ்வளவோ சொன்ன தப்பான முடிவு எடுக்காதன்னு. ஆனால் என்னால முடியல பாலா. I am really so sorry Bala..

என்னோட இறப்புக்கு யாரும் காரணமில்லை. இது என் சுயமான முடிவாகும். என்னுடைய கடைசி ஆசை, நான் இறந்த பின்பு என்னைப் பார்க்க திவ்யா வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி ஒருவேளை திவ்யா வந்தால் யாரும் அவளைத் திட்ட வேண்டாம். அவளை அனுமதிக்க வேண்டும்.

Please, அவளை யாரும் கோபமாகப் பேசவேண்டாம். திவ்யா ரொம்ப நல்ல பொண்ணு. எனக்கு அவளை ரொம்பப் பிடிக்கும். என்னால அவ கஷ்டப்படறது எனக்கு பிடிக்கல. அவளாவது. வாழ்க்கைல சந்தோசமா இருக்கட்டும்.

ததேகூ உறுப்பினர்கள் சிவசங்கர மேனனுடன் சந்திப்பு..!

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13வது சட்டத்திருத்தத்தை திருத்த இலங்கை அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து விவாதித்தனர்.

இது குறித்து தமிழோசைக்குக் கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், இந்திய இலங்கை ஒப்பந்தம்தான், வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பிரதேசங்களை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியாக வசித்து வந்த பூமியாக அங்கீகரித்தது என்ற அடிப்படையில், அந்தப்பகுதியில் தற்போது இலங்கை அரசு சிங்கள குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக மேனனிடம் கூறியதாக்த் தெரிவித்தார்.

எனவே இந்திய இலங்கை ஒப்ப்பந்த்த்தின் அனைத்து அம்சங்களும் நிறைவேற்றப்படவேண்டும், இது போன்ற சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும் என்று அவரிடம் தெரிவித்த்தாக சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார்.
வடமாகாணத்தில் முறையான, நியாயமான தேர்தல் நடத்துவதாக இருந்தால், வடமாகாணத்தில் இருக்கும் ராணுவமும், ராணுவப் புலான்ய்வுப்பிரிவும் ராணுவ முகாம்களுக்குள் போகவேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அது மட்டுமல்லாமல் தேர்தலைக் கண்காணிக்க சர்வதேச கண்காணிப்பாளர்கள் நிலை நிறுத்தப்படவேண்டும், அந்த விடயத்திலும் இந்தியா அக்கறை காட்டவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்தியா இந்த இரண்டு விஷயங்களிலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரின் கோரிக்கைகளுடன் உடன்படுவதாகவே தங்களுக்கு மேனன் தெரிவித்ததாக சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

(BBC)

வவுனியா முருகனூரில் புதையல் விவகாரம்: பொலிசாரால் கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தினால்பிணையில் விடுதலை..!

vavuniy

கடந்த மாதம் 30 ம் திகதி வவுனியா முருகனூரில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் புதை பொருள் களவாடல் என்ற சட்டத்தின் கீழ் சாமி கலையாடிய ஒரு பெண் ,ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் பொலிசாரினால் கைது செய்யபட்டு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கடந்த 5 ம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் என ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்தனர்.

இது பற்றி ஆலய நிர்வாக சபையினர் கூறியதாவது பல ஆண்டுகளுக்கு பிறகு அண்மையிலே இவ்வாலயத்தில் மஹா கும்பாபிசேகம் இடம் பெற்றது சில நாட்களின் பின் எழுந்தருளி விநாயகர் சிலை இனந்தெரியாத நபர்களால் களவாடப்பட்டது இது பற்றி பொலிஸிலும் புகார் செய்யப்பட்டது அதன் பிறகு மதங்கள் சார்ந்த சமூக நம்பிக்கைகளுக்கு ஏற்ப எமது ஆலய பக்தர்களும் சமூகமும் இணைந்து தத்தம் நம்பிக்கைகளுக்கு ஏற்ப சுதந்திரமான முறையில் சாமி பார்த்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டோம் இது தொடர்பாக பொலிசார் உதவியும் நாடப்பட்டது

கடந்த 30 ம்திகதி சாமி கலையாடிய பெண் சாமியார் ஆலயத்தின் பின் புறத்திலே விநாயகர் திருவுருவம் இருப்பதாகவும் அவ்விடத்திலே கிடங்கினை வெட்டுமாறு கூறிய போது தொண்டர்கள் கிடங்கினை வெட்டிய போது அவ்விடத்திற்கு வந்த 119 பொலிசார் புதை பொருள் களவாடல் சட்டத்தின் கீழ் பெண் சாமியார் .சாமியாரின் குழந்தை .ஆலய தொண்டர்கள் ,பரிபாலன சபை உட்பட எட்டு பேரை கைது செய்தனர் .விசாரணைகளின் பின் கடந்த 5ம் திகதி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் அடுத்த வழக்கு 21 ம்திகதி நடை பெறவுள்ளது

இது பற்றி ஊர்மக்கள் கூறியதாவது ஆலய விக்கிரக களவு தொடர்பாக 119 பொலிசிக்கு அறிவித்த நபரை சந்தேக படுவதாகவும் அவரை பொலிசார் விசாரித்தால் உண்மை தெரிய வரும் எனவும் கூறினர் இக் கைது விடயம் தொடர்பாக பிரதேச செயலர் ,கலாசார உத்தியோகத்தர் சிவில் பாதுகாப்பு குழு, பாராளு மன்ற உறுப்பினர்கள் என பல தரப்பினரிடம் கூறிய போதும் இது வரை ஆலயத்தை வந்து பார்க்கவில்லை என ஆதங்கத்துடன் ஊர் மக்கள் கவலை தெரிவித்தனர்.

இலங்கை தூதரை அழைத்து கண்டிக்குமாறு மன்மோகனுக்கு ஜெயலலிதா கடிதம்..!

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:–

தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமாக கடத்திச் சென்று கைது செய்யப்பட்டுள்ள அராஜகம் குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

அவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர். தற்போது 21 மீனவர்களும் 19.7.2013 வரை இலங்கை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி சட்டவிரோதமாக கடத்தி கைது செய்வது பற்றி மீண்டும், மீண்டும் நான் உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்து கடிதம் எழுதி வருகிறேன். 5.6.2013 அன்று 10 படகுகளில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படை கடத்திச் சென்றது உங்களுக்குத் தெரியும்.

அவர்களில் 24 மீனவர்கள் 2.7.2013 அன்று விடுதலை செய்யப்பட்டனர். மற்ற 25 மீனவர்கள் சுமார் ஒரு மாதம் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்ட பிறகு கடந்த 3.7.2013 அன்று விடுதலை ஆனார்கள்.

15.6.2013 அன்று இரண்டு படகுகளில் மீன் பிடிக்க சென்ற 8 மீனவர்கள் சட்டவிரோதமாக பிடித்து செல்லப்பட்டு, இன்னமும் இலங்கையில் உள்ள சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தவிர இராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 29.11.2011 முதல் இலங்கை சிறையில் தவித்தப்படி உள்ளனர்.

கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்களை மீன் பிடிக்க விடக்கூடாது என்ற எண்ணத்தில் இலங்கை கடற்படையினர் அப்பாவியான, ஆயுதம் இல்லாத மீனவர்களை திட்டமிட்டு தாக்குகிறார்கள். இந்த கச்சத்தீவு பகுதியில்தான் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வருகிறார்கள் என்பதை எனது அரசு எப்போதும் வலியுறுத்தி கூறி வருகிறது.

இலங்கை கடற்படையினரின் இத்தகைய வன்செயல்களை இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டமாகும். இது தமிழக மீனவர்களிடம் அதிருப்தியை அதிகரிக்க செய்து நிலைமையை மோசமாக்கி விடும்.

ஏற்கனவே நான் 17.6.2013 அன்று உங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி மத்திய வெளியுறவுத்துறை இந்த விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, பேச்சுவார்த்தை உள்ளிட்ட எந்த முயற்சியையும் இந்திய அரசு எடுப்பதற்கான அறிகுறி இல்லை.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கணக்கற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டிருப்பது, குறிப்பாக சமீபகாலங்களில் இந்த சம்பவம் அதிகரித்து இருப்பதால் உயர்மட்ட தூதரக அளவில் பேச்சு நடத்த வேண்டியது அவசியமாகும்.

எனவே டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும், கைது செய்து சிறையில் அடைப்பதற்கும் கடுமையான கண்டனம் தெரிவித்து கண்டிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று இலங்கை தூதரிடம் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வற்புறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.